மேட்டூர் அணைக்கு.. நீர்வரத்து விநாடிக்கு 90,000 கன அடியாக குறைந்தது.. நீர் திறப்பும் குறைப்பு!

Manjula Devi
Aug 03, 2024,11:23 AM IST

சேலம்:   மேட்டூர் அணைக்கு தற்போது நீர்வரத்து விநாடிக்கு 90,000 கன அடியாக குறைந்துள்ளது. இதனால் நீர் திறப்பும் சற்று குறைக்கப்பட்டுள்ளது. 


கர்நாடகாவின் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர் கனமழை எதிரொலியாக கடந்த ஒரு மாதமாக  அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது. இதனை அடுத்து திறந்த விடப்படும் நீரின் அளவும் அதிகரித்து மேட்டூர் அணைக்கு நீரின் அளவு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே சென்றது. இதனையடுத்து கடந்த 30ஆம் தேதி மேட்டூர் அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. 



பின்னர் அணைக்கு வரும் உபரி நீரின் அளவு அப்படியே  16 மதகு கண் வழியாக  திறக்கப்பட்டு வந்தது. இதனால் காவிரி ஆற்றில் இரு கரைகளையும் தொட்டவாறு வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் இன்று ஆடிப்பெருக்கை முன்னிட்டு காவிரி ஆறுகளில் அதிக நீர் வரத்து உள்ள பகுதிகளில்  பொதுமக்கள் ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ தடை விதிக்கப்பட்டுள்ளது.


இந்த நிலையில் மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும்‌ நீரின் அளவு தற்போது தொடர்ந்து ஐந்தாவது நாளாக குறைக்கப்பட்டுள்ளது. அணைக்கு நீர்வரத்து தற்போது விநாடிக்கு 90,000 கன அடி ஆக குறைந்தது. இதனைத் தொடர்ந்து அணைக்கு வரும்  நீர், அப்படியே திறந்து விடப்படுகிறது. மேட்டூர் அணைக்கு வரும் நீர் அப்படியே வெளியேற்றப்படுவதால் தற்போது அணையின் நீர்மட்டம்  முழு கொள்ளளவான 120 அடியாகவே உள்ளது. அணையின் நீர் இருப்பு 93.470 டிஎம்சி ஆக உள்ளது.