வி.கே பாண்டியன் அபீஷியலா உள்ளே வந்தாச்சு.. நவீன் பட்நாயக்கின் அடுத்த பிளான் என்ன?

Su.tha Arivalagan
Nov 27, 2023,07:04 PM IST

புவனேஸ்வர்: வி. கார்த்திகேய பாண்டியன் எனப்படும் வி. கே. பாண்டியன் ஒரு வழியாக அதிகாரப்பூர்வமாக பிஜூ ஜனதாதளம் கட்சியில் இணைந்து விட்டார். இனி அடுத்து முதல்வர் நவீன் பட்நாயக்கின் திட்டம் என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது.


மதுரையைச் சேர்ந்தவர் வி.கே. பாண்டியன். ஒடிஷா மாநிலத்தில் ஐஏஎஸ் அதிகாரியாக இருந்தவர். அவரது திறமையான செயல்பாடுகளால் மக்களின் மனதில்  அப்படியே முதல்வர் நவீன் பட்நாயக்கின் பார்வையிலும் பட்டவர். அதன் பின்னர் வி.கே. பாண்டியன் பின்னோக்கிப் போகவே இல்லை. தொடர்ந்து அதிரடியான உயர்வுகளைக் கண்டு வருகிறார்.


வி.கே. பாண்டியன் கிட்டத்தட்ட நவீன் பட்நாயக்கின் நிழலாகவே மாறி விட்டவர். இவரிடம் ஆலோசனை கேட்காமல், நவீன் பட்நாயக் எதுவுமே செய்வதில்லை என்ற அளவுக்கு மாறிப் போய் விட்டார் பாண்டியன். முதல்வர் பட்நாயக்கின் பல்வேறு திட்டங்களின் மூளையாக செயல்பட்டவர் பாண்டியன். ஒடிஷாவில் அசைக்க முடியாத பிஜு ஜனதாதளம் விளங்க பாண்டியன் வழிகாட்டுதலும் ஒரு காரணம் என்று சொல்லலாம்.




சமீபத்தில்தான் தனது ஐஏஎஸ் பதவியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்றார் பாண்டியன். அதன் பின்னர் அவர் கட்சியில் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் சேரவில்லை. மாறாக கேபினட் அமைச்சர் பொறுப்பு கொடுத்து அமர வைத்தார் முதல்வர் நவீன் பட்நாயக். இந்த நிலையில் இன்று முறைப்படி கட்சியில் சேர்ந்து விட்டார் பாண்டியன்.


முதல்வர் நவீன் பட்நாயக், கட்சி எம்.எல்.ஏக்கள் மூத்த தலைவர்கள் முன்னிலையில் கட்சியில் அவர் இணைந்தார். பின்னர் பட்நாயக் வெளியிட்ட வீடியோ செய்தியில், பாண்டியனை பிஜூ ஜனதாதளம் கட்சிக்கு வரவேற்கிறேன். கட்சிக்காகவும், ஒடிஷா மக்களுக்காகவும் மிகுந்த அர்ப்பணிப்புடன் பாண்டியன் பணியாற்றுவார் என்று கூறியுள்ளார் நவீன் பட்நாயக்.