Odisha Politics: வி.ஆர்.எஸ். வாங்கிய வி.கே. பாண்டியன்.. புது போஸ்ட் கொடுத்த நவீன் பட்நாயக்!

Su.tha Arivalagan
Oct 24, 2023,01:54 PM IST

புவனேஸ்வர்: ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக்கின் நிழலாக அறியப்படும் வி.கே.பாண்டியன் ஐஏஎஸ் அதிகாரி, அரசுப் பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்றுள்ளார். அவருக்கு கேபினட் அமைச்சர் அந்தஸ்திலான புதிய பொறுப்பை முதல்வர் நவீன் பட்நாயக் தற்போது அளித்துள்ளார்.


தமிழ்நாட்டைப் பூர்வீமாகக் கொண்டவர் வி.கே.பாண்டியன். ஒடிஷா மாநிலத்தின் முக்கியமான அரசு அதிகாரியாக விளங்கி வந்தவர். குறிப்பாக நவீன் பட்நாயக்கின் நிழல் போல செயல்படுபவர் வி.கே. பாண்டியன். அவரது செயலாற்றல், சமயோஜிதமாக முடிவெடுக்கும் சாதுரியம், திறமை, சுறுசுறுப்பு, அவர் தரும் சிறந்த ஆலோசனைகள் போன்ற பல்வேறு காரணங்களுக்காக நவீன் பட்நாயக் அவரை முழு அதிகாரம் கொடுத்து தன் பக்கத்திலேயே வைத்துள்ளார்.




கிட்டத்தட்ட நிழல் முதல்வர் போலவே செயல்பட்டு வருகிறார் வி.கே. பாண்டியன். மேலும் நவீன் பட்நாயக்கின் பல்வேறு அரசியல் முடிவுகளுக்கும் கூட வி.கே. பாண்டியன் பின்னணியில் இருப்பதாகவும் கூறப்படுவதுண்டு.  இந்த நிலையில் தனது ஐஏஎஸ் பதவியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்றுள்ளார் வி.கே.பாண்டியன். இதுவரை அவர் முதல்வரின் தனிச் செயலாளராக பதவி வகித்து வந்தார். தற்போது முதல்வரின் 5டி திட்டங்கள் மற்றும் நபீன் ஒடிஷா திட்டத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். அவரது பதவி கேபினட் அமைச்சர் பதவி அந்தஸ்து கொண்டதாக அரசு பிறப்பித்துள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


முன்னதாக அவர் விருப்ப ஓய்வு பெற்று விட்டு பிஜு ஜனதாதளம் கட்சியில் இணைந்து முழு அளவிலான அரசியலில் ஈடுபடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அடுத்த வருடம் வரும் சட்டசபைத் தேர்தலில் பிஜு ஜனதாதளத்தை மிகப் பெரிய வெற்றிக்கு இட்டுச் செல்ல அவர் பாடுபடுவார் என்றும் கூறப்பட்டது. இருப்பினும் இப்போது அவர் அரசியலுக்கு வரவில்லை.


2000மாவது ஆண்டு பேட்ஜ் ஐஏஎஸ் அதிகாரியான விகே பாண்டியன், 2002ம் ஆண்டு தரம்கர் மாவட்ட துணை கலெக்டராக தனது பணியைத் தொடங்கியவர். பின்னர் மயூர்பாஞ்ச் கலெக்டராக செயல்பட்டார். பல்வேறு மாவட்ட கலெக்டராக செயல்பட்ட அவரது நிர்வாகத் திறமை, செயல்திறனைப் பார்த்து வியந்த முதல்வர் நவீன் பட்நாயக், அவரை தன் அருகே வைத்துக் கொள்ள விரும்பி 2011ம் ஆண்டு தனது அலுவலகத்தில் பணியமர்த்தினார். தொடர்ந்து அவரது தனிச் செயலாளராக வி.கே.பாண்டியன் உயர்ந்தார்.


கட்சித் தலைவர்கள், நிர்வாகிகளை விட முதல்வர் நவீன் பட்நாயக்கின் நம்பிக்கையை அதிகம் பெற்றவர் பாண்டியன்தான். இது கட்சித் தலைவர்களிடையே பூசலையும், கோபத்தையும் கூட ஏற்படுத்தியது. ஆனால் முதல்வர் நவீன் பட்நாயக் தனது பாண்டியன் பாசத்தை விட்டு விடத் தயாரில்லை. தொடர்ந்து அவரை முக்கியப் பொறுப்பில் அமர்த்தி அழகு பார்த்து வருகிறார்.