கல்யாணம் முடிந்த கையோடு.. மனைவிக்கு சரமாரி அடி உதை.. சர்ச்சையில் "மோட்டிவேஷனல் ஸ்பீக்கர்"!

Manjula Devi
Dec 23, 2023,05:44 PM IST
நொய்டா:  பிரபலமான மோட்டிவேஷனல் பேச்சாளரான விவேக் பிந்த்ராவுக்கு கல்யாணம் முடிந்து எட்டு நாட்களே ஆகியுள்ள நிலையில் மனைவியை அடித்து உதைத்ததாக சர்ச்சையில் சிக்கியுள்ளார். அவர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

படா பிசினஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தின் நிறுவனராக, தலைமை செயலதிகாரியாக இருப்பவர் விவேக் பிந்த்ரா. இவர் ஒரு மோட்டிவேஷனல் பேச்சாளர். பிரபலமானவரும் கூட. டிசம்பர் 6 ஆம் தேதி பிந்த்ராவுக்கும், யானிக்கா என்பவருக்கும் திருமணம் நடந்துள்ளது.  திருமணமாகி எட்டு நாட்களே ஆன நிலையில் பிந்த்ரா மீது யானிக்காவின் சகோதரர்  வைபவ் குவாத்ரா, நொய்டா காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

அதில்,  திருமணம் நடந்து ஒரு சில நேரங்களில் யானிக்காவை அறைக்குள் அழைத்துச் சென்று தலைமுடியை பிடித்து சரமாரியாக தாக்கி உள்ளார் பிந்த்ரா. அந்த தாக்குதலின் போது யானிகாவிற்கு காதில் அடிபட்டு காதே கேட்காமல் போய் விட்டது. மறுநாள் காலை டிசம்பர் 7ஆம் தேதி பிந்த்ராவுக்கும் யானிக்காவுடைய தாயாருக்கும் கடுமையான வாக்குவாதம் எழுந்துள்ளது. இந்தக் குடும்ப தகராறில் யானிக்கா குறுக்கிட்ட போது யானிகாவிற்கு பலத்த காயம் ஏற்பட்டது என கூறியிருந்தார்.



இந்தப் புகாரின் பேரில் போலீஸார் தற்போது 4க்கும் மேற்பட்ட பிரிவுகளின் கீழ் பிந்த்ரா மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காயமடைந்த யானிக்கா தற்போது டெல்லியில் உள்ள கைலாஷ் தீபக் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளாராம். 

பிரபலமானவராக வலம் வரும் பிந்த்ரா மீது எழுந்துள்ள இந்தப் புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  ஆனால் தன் மீதான புகார்களை மறுத்துள்ளார் பிந்த்ரா.