விஸ்தாராவுக்கு சிக்கல்.. போர்க்கொடி உயர்த்திய பைலட்டுகள்.. நாடு முழுவதும் பல விமானங்கள் ரத்து!

Su.tha Arivalagan
Apr 02, 2024,06:04 PM IST

டெல்லி: விஸ்தாரா நிறுவனத்தின் பைலட்டுகள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் குதித்துள்ளனர். இதனால் நாடு முழுவதும் பல விமானங்களை விஸ்தாரா நிறுவனம் ரத்து செய்துள்ளது.


நேற்று மட்டும் 50க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இன்றும் கூட 38 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் விஸ்தாராவில் பயணிக்க டிக்கெட் புக் பண்ணியிருந்த பயணிகளுக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 


மும்பையிலிருந்து கிளம்ப வேண்டிய 15 விமானங்களும், டெல்லியிலிருந்து 12 விமானங்களும், பெங்களூரிலிருந்து 11 விமானங்களையும் விஸ்தாரா நிறுவனம் இன்று ரத்து செய்தது.




விமானங்களை ரத்து செய்தது தொடர்பாக  முறையான அறிவிப்பைவிஸ்தாரா நிறுவனம் வெளியிடாததால் விமான நிலையங்களில் பயணிகள் பெரும் தவிப்புக்குள்ளானார்கள். நீண்ட நேரம் காத்திருந்து காத்திருந்து பெரும் தாமதத்திற்குப் பின்னர்தான் விமானம் ரத்து என்ற தகவலை சொல்லியது விஸ்தாரா என்று பயணிகள் குமுறல் வெளியிட்டுள்ளனர்.


ஊழியர்கள் பற்றாக்குறை காரணமாக விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக விஸ்தாரா விளக்கம் அளித்துள்ளது. இதனால் பயணிகளுக்கு ஏற்பட்டுள்ள அசவுகரியங்களுக்கு வருந்துவதாகவும் அது தெரிவித்துள்ளது.


நிலைமையை சமாளிப்பதற்காக குறைந்த அளவிலான சேவையை மேற்கொள்ள விஸ்தாரா திட்டமிட்டுள்ளதாம். இதன் மூலம் இருக்கும் ஊழியர்களை வைத்து சமாளிக்க அது முடிவு செய்துள்ளது.


விரைவில் விஸ்தாரா நிறுவனம் ஏர் இந்தியாவுடன் இணையவுள்ளது. இதையடுத்து விஸ்தாரா தனது ஊழியர்களின் சம்பள விகிதத்தைக் குறைக்க ஆரம்பித்துள்ளது. இதனால் பைலட்டுகள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். வேலைநிறுத்தத்தில் குதித்துள்ளனர். இதுதான் தற்போது விஸ்தாரா நிறுவனத்தின் சேவை பாதிக்கப்பட முக்கியக் காரணம். ஊதிய மாற்றம் குறித்த தகவலை இமெயில் மூலம் பைலட்டுகளுக்கு அனுப்பியுள்ள விஸ்தாரா நிறுவனம், அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடாவிட்டால் ஏர் இந்தியாவுடன் இணையும் போது உங்களது பெயர் விடுபட்டுப் போகும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.


பிரச்சினையைத் தீர்க்கும் நடவடிக்கைகளில் தற்போது விஸ்தாரா நிறுவனம் இறங்கியுள்ளது. இவர்களது சண்டையால் அப்பாவி பயணிகள்தான் கடும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர்.