பைலட்டுடன் மல்லுக்கட்டிய பயணி.. வெளியே வந்து விரட்டி விட்ட விமானி.. ஆஸ்திரேலியாவில்!
சிட்னி: ஏர் இந்தியாவில் பெண் பயணி மீது சிறுநீர் கழித்த ஆண் பயணி ஏற்படுத்திய பரபரப்பு ஓயாத நிலையில் ஆஸ்திரேலியாவில் வேறு மாதிரியான ரகளை நடந்துள்ளது.
விமானங்களில் சில பயணிகளால் ஏற்படும் குழப்பச் செயல்கள் அதிகரிக்க ஆரம்பித்துள்ளன. குடிபோதையில் தேவையில்லாத வேலைகளில் ஈடுபடுவது, சக பயணிகளுடன் சண்டை போடுவது என விமான பயணிகளின் அடாவடி செயல்கள் உலகெங்கும் பரவலாக ஆரம்பித்துள்ளன.
இதனால் விமானம் மற்றும் பயணிகளின் பாதுகாப்பு பெரும் கேள்விக்குறியாகத் தொடங்கியுள்ளது. நிம்மதியான பயணமும் கேள்விக்குறியாகியுள்ளது. இந்த நிலையில் ஆஸ்திரேலியாவில் ஒரு பயணி விமானியிடமே ரகளையில் ஈடுபட, அவரை விமானி காக்பிட்டை விட்டு வெளியே வந்து கழுத்தைப் பிடித்து இறக்கி விட்ட சம்பவம் நடந்துள்ளது.
விர்ஜின் ஆஸ்திரேலியா நிறுவன விமானம் அது. டவுன்ஸ்வில்லி - சிட்னி இடையிலான அந்த விமானம், டவுன்ஸ்வில்லி விமான நிலையத்தில் கிளம்பத் தயாராக இருந்தது. அப்போது அரைக்கால் டிரவுசர் போட்ட ஒரு பயணி, விமானியிடம் சண்டையில் குதித்தார். விமானி அவரை வெளியேறுமாறு பலமுறை கூறியும் அந்த நபர் வெளியேறவில்லை. இதனால் கோபமடைந்த விமானி, காக்பிட் அறையை விட்டு வெளியே வந்தார். அந்த பயணியை அங்கிருந்து அப்புறப்படுத்தினார். அவரது கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளிக் கொண்டு வந்தார். சிறிது நேர தள்ளுமுள்ளுக்குப் பின்னர் அந்த பயணி விமானத்தை விட்டு வெளியேறிச் சென்றார்.
பென் மெக்கே என்பவர் இந்த வீடியோவை டிக்டாக்கில் வெளியிட அது வைரலாகி விட்டது. தற்போது அந்த நபருக்கு விமான பயண தடையை விர்ஜின் ஆஸ்திரேலியா நிறுவனம் விதித்துள்ளது.