9 மாதம் கழித்து 50 போட்ட விராட் கோலி.. டெஸ்ட் போட்டிகளிலும் புதிய மைல்கல்லை எட்டினார்!

Su.tha Arivalagan
Oct 18, 2024,05:05 PM IST

பெங்களூரு:   பெங்களூரு சின்னச்சாமி ஸ்டேடியத்தில் நடைபெறும் நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் 2வது இன்னிங்ஸில் இந்திய வீரர் விராட் கோலி புதிய மைல்கல்லை எட்டினார்.


3வது நாளான இன்று இந்தியாவுக்கு சற்றே ஆதரவு அளிக்கும் வகையில் விராட் கோலியின் அரை சதம் வந்தமைந்தது. கிட்டத்தட்ட 9 மாதங்களுக்குப் பிறகு விராட் கோலி தனது முதல் அரை சதத்தை அடித்துள்ளார். கடந்த ஆண்டு டிசம்பர் 26ம் தேதி தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில்தான் கடைசியாக அரை சதம் போட்டிருந்தார் விராட் கோலி. அதில் 76 ரன்களை எடுத்திருந்தார் விராட் கோலி.




இந்த நிலைியல் இன்று விராட் கோலி மேலும் ஒரு புதிய மைல்கல்லையும் எட்டினார். அதாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அவர் 9000 ரன்களைப் பூர்த்தி செய்துள்ளார்.  அவரும் சர்பிராஸ் கானும் சேர்ந்து 100 ரன்களை சேர்த்து இந்திய அணிக்கு சற்று ஸ்திரம் கொடுத்தனர். சர்பிராஸ் கானும் இன்று அரை சதம் எடுத்தார்.


முன்னதாக இந்தியா தனது  முதல் இன்னிங்ஸை 46 ரன்களுக்கு இழந்திருந்தது. பதிலுக்கு நியூசிலாந்து தனது முதல் இன்னிங்ஸில் 402 ரன்களை எடுத்தது. ரச்சின் ரவீந்திரா சதமடித்து  நியூசிலாந்து அணியின் ஸ்கோர் வலுப்பெற உதவினார். அவர் எடுத்த ரன்கள் 134 ரன்களாகும். தேவான் கான்வே 91 ரன்களைக் குவித்தார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்