கண்ணீருடன் தாய் மண்ணில் கால் பதித்த.. வினேஷ் போகத்.. கட்டித் தழுவி.. ஆறுதல் அளித்த உறவினர்கள்!

Manjula Devi
Aug 17, 2024,07:56 PM IST

புது டெல்லி: பாரீஸ் ஒலிம்பிக் போட்டி சோகத்திற்குப் பின்னர், நாடு திரும்பிய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்துக்கு இன்று டெல்லி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. அப்போது ஆனந்த் கண்ணீர் விட்ட வினேஷ் போகத்தை  உறவினர்கள் ஆரத் தழுவி ஆறுதல் அளித்தனர்.


33வது பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் மகளிர் மல்யுத்தம் போட்டியில் களமிறங்கிய வினேஷ் போகத் இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார். அப்போது 50 கிலோ எடை பிரிவில் வினேஷ் போகத்தின் உடல் எடையைப் பரிசோதித்தபோது, அவர் 100 கிராம் எடை கூடுதலாக இருந்த காரணத்தால் ஒலிம்பிக் விதிமுறைகளின் படி தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து வினேஷ் போகத் மனம் உடைந்து உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.




வினேஷ் போகத்துக்கு ஆதரவாக, பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள், இந்திய மக்கள், ரசிகர்கள், பல நாட்டு விளையாட்டுத் துறையினர் ஆதரவாக கருத்து தெரிவித்தனர். வினேஷ் போகத் மனம் உடைந்த நிலையில், தான் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இது ரசிகர்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கிடையே வினேஷ் போகத்துக்கு வெள்ளி பதக்கம் வென்றவருக்கான அனைத்து சலுகைகளும் வழங்கப்பட்டு ஹரியானா அரசு சார்பில் மரியாதை வழங்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்திருந்தது.


வினேஷ் போகத் தாக்கல் செய்திருந்த அப்பீலும் நிராகரிக்கப்பட்டதால் பதக்க வாய்ப்பு தகர்ந்து போனது. இந்த நிலையில் இன்று நாடு திரும்பினார் வினேஷ் போகத். டெல்லி விமான நிலையத்தில் அவரை வரவேற்க பெரும் திரளான ரசிகர்கள் கூடியிருந்தனர். அவர்களின் உற்சாக வரவேற்பால் நெகிழ்ந்து போன வினேஷ் போகத் அழுதபடி காணப்பட்டார்.




வினேஷ் போகத்தின் உறவினர்கள், காங்கிரஸ் எம்பி தீபேந்தர் ஹூடா, சக மல்யுத்த வீராங்கனையான சாக்‌ஷி மாலிக், மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா உள்ளிட்டோர் நேரில் சென்று வரவேற்றனர். ரசிகர்கள் மற்றும் உறவினர்களை கண்டதுமே வினேஷ் போகத்துக்கு கண்களில் இருந்து சாரை சாரையாக கண்ணீர் கொட்டியது. அவரை ஆரத் தழுவி அணைத்துக் கொண்டு அனைவரும் ஆறுதல் கூறினர்.


பதக்கம் வெல்லவில்லை என்றாலும் நீ எப்போதும் எங்களின் தங்க மகள்தான் என்று வினேஷ் போகத்தை மக்கள் சமூக வலைதளங்களில் வினேஷை வரவேற்று பாராட்டி வருகின்றனர்.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்