விநாயகர் சதுர்த்தி.. தமிழ்நாடு முழுவதும் கோவில்களில் கோலாகலம்

Su.tha Arivalagan
Sep 18, 2023,10:03 AM IST

சென்னை: விநாயகர் சதுர்த்தி விழா தமிழ்நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவில் முதல் தமிழ்நாட்டின் அனைத்துக் கோவில்களிலும் விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.


விநாயகர் சதுர்த்தி இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி வீடுகள் தோறும் மக்கள் விநாயகரின் களிமண் சிலைகள், படங்களுக்கு சிறப்புப் பூஜை செய்து  கொழுக்கட்டை உள்ளிட்டவற்றை படையலிட்டு வணங்கி வழிபட்டனர்.


இதேபோல கோவில்களிலும் இன்று சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. பிள்ளையார்பட்டியில் உள்ள பிரசித்தி பெற்ற கற்பக விநாயகர் கோவில் இன்று களை கட்டியிருந்தது. அதிகாலையிலேயே மக்கள் குவிந்து நீண்ட வரிசையில் காத்திருந்து விநாயகரை தரிசித்து மகிழ்ந்தனர். 




திருச்சி உச்சிப்பிள்ளையார் கோவில், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள முக்குருணி விநாயகர், புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவில் உள்ளிட்ட அனைத்துக் கோவில்களிலும் இன்று விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்பட்டது.


விநாயகருக்கு கொழுக்கட்டை, பழங்கள், அன்னம் உள்ளிட்ட பல்வேறு வகையான படையல்களும் இடப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக அளிக்கப்பட்டன.


வழக்கம்போல இந்த ஆண்டும் காவல்துறையால் அனுமதிக்கப்பட்ட பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு அங்கும் மக்கள் வழிபட்டு வருகின்றனர். விநாயகர் சதுர்த்தியையொட்டி தமிழ்நாடு முழுவதும் போதிய பாதுகாப்புக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.