விநாயகர் சதுர்த்தி.. செப்டம்பர் 17 இல்லை.. 18ம் தேதிதான் விடுமுறை.. அரசு அறிவிப்பு

Su.tha Arivalagan
Aug 31, 2023,04:12 PM IST
சென்னை: தமிழ்நாட்டில் செப்டம்பர் 18ம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படவுள்ள நிலையில் அரசு விடுமுறை முன்பு அறிவித்த செப்டம்பர் 17ம் தேதி இல்லை என்றும், 18ம் தேதிக்கு விடுமுறையை மாற்றியும் தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

நாடு முழுவதும் கொண்டாடப்படும் இந்துப் பண்டிகைகளில் முக்கியமானது விநாயகர் சதுர்த்தி. வட மாநிலங்களில் குறிப்பாக மகாராஷ்டிராவில் விநாயகர் சதுர்த்தி மிகப் பெரிய அளவில் கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு செப்டம்பர் 19ம் தேதி வட மாநிலங்களில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை செப்டம்பர் 18ம் தேதி கொண்டாடப்படுகிறது.

ஆனால் தமிழ்நாடு அரசு செப்டம்பர் 17ம் தேதி அரசு விடுமுறையை அறிவித்திருந்தது. இதனால் குழப்பம் ஏற்பட்டது. விடுமுறையை செப்டம்பர் 18ம் தேதிக்கு மாற்ற வேண்டும் என்று ஜோதிடர்கள் தரப்பிலிருந்து தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கைகள் சென்றன. ஜோதிடர்கள் கூற்றுப்படி, அவர்கள் கூறுகையில் அமாவாசை தொடங்கி நான்கு நாள் கழித்து விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது.  

அமாவாசை செப்டம்பர் 18 ஆம் தேதி காலை 11:28 தொடங்கி மறுநாள் செப்டம்பர் 19ஆம் தேதி காலை 11: 44 மணிக்கு  முடிவடைகிறது. தமிழாநாட்டில் வாக்கிய பஞ்சாங்கத்தைதான் பெரும்பாலானவர்கள் பின்பற்றுகின்றனர். அந்த அடிப்படையில், தமிழ்நாட்டில் விநாயகர் சதுர்த்தி செப்டம்பர் 18ஆம் தேதி கொண்டாடப்படுகிறது .  

தமிழகத்தில் உள்ள விநாயகரின் முக்கிய ஸ்தலங்களான திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோவில், சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டி மற்றும் அனைத்து கோவில்களிலும் வரும் செப்டம்பர் 18ஆம் தேதிதான் விநாயகர் சதுர்த்தி வெகு விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது.
       
பண்டிதர்கள், பஞ்சாங்க வெளியீட்டாளர்களின் அறிவுரைப்படி, செப்டம்பர் 18ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது.  இந்த நிலையில் ஜோதிடர்களின் கோரிக்கையை பரிசீலித்த அரசு தற்போது விடுமுறையைக செப்டம்பர் 18ம் தேதிக்கு மாற்றி அரசாணை பிறப்பித்துள்ளதாக தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா தெரிவித்துள்ளார்.