விநாயகர் சதுர்த்தி ..  செப்டம்பர் 18ம் தேதி ரேஷன் கடைகளுக்கு லீவு!

Su.tha Arivalagan
Sep 08, 2023,01:06 PM IST
சென்னை:  விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நியாய விலை கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் 18ஆம் தேதி அன்று விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. விநாயகர் சதுர்த்தி அன்று மக்கள் தங்கள் வீடுகளை சுத்தம் செய்து, மாவிளை தோரணம் கட்டி, அலங்கரித்து, விநாயகருக்கு பிடித்த சுண்டல்,கொழுக்கட்டை மற்றும் பழங்களை படைத்து விநாயகர் சதுர்த்தியை சிறப்பாக கொண்டாடுவர். 



நகரம் ,கிராமம், குக்கிராமம் உள்ளிட்டவற்றில், பொது இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து மூன்றாவது நாள் அந்த சிலைகளை நீர்நிலைகளில் கரைத்து விடுவது வழக்கம். நாட்டின் ஒவ்வொரு மாநிலத்திலும் அவர்களின் கலாச்சாரத்திற்கு ஏற்ப விநாயகர் சதுர்த்தி விழாவை சிறப்பாக கொண்டாடி மகிழ்வர்.

தமிழ்நாட்டில் செப்டம்பர் 18ம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படவுள்ளது. முதலில் விநாயகர் சதுர்த்தி விடுமுறை செப்டம்பர் 17 என்று அரசு அறிவித்திருந்த நிலையில், பின்னர் அது செப்டம்பர் 18 என மாற்றி அறிவிக்கப்பட்டது. ரேஷன் கடைகளில் எப்போதும் ஞாயிற்றுக்கிழமை கடை உண்டு. ஆனால் முதலில்  செப்டம்பர் 17 விநாயகர் சதுர்த்தி விடுமுறை என அறிவிக்கப்பட்டதால், ஞாயிற்றுக்கிழமை அனைத்து ரேஷன் கடைகளுக்கும் அரசு விடுமுறை அளிக்கப்பட்டது.

தற்போது செப்டம்பர் 18ம் தேதி அரசு விடுமுறை மாற்றப்பட்டுள்ளதால், ரேஷன் கடைகளுக்கும் அன்றே விடுமுறை மாற்றி அறிவிக்கப்பட்டுள்ளது என உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை கமிஷனர் தெரிவித்துள்ளார்.