ஜூலை 10ம் தேதி.. விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல்.. தேதி குறித்தது தேர்தல் ஆணையம்!

Manjula Devi
Jun 10, 2024,05:32 PM IST

விழுப்புரம்: விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்எல்ஏ புகழேந்தி மரணம் அடைந்ததை தொடர்ந்து அத்தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்ட நிலையில், ஜூலை 10ஆம் தேதி விக்கிரவாண்டி தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தப்படவுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


நாடு முழுவதும் 7 மாநிலங்களில் விக்கிரவாண்டி உள்பட 13 சட்டசபைத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் தேதியை இன்று அறிவித்தது தேர்தல் ஆணையம்.


கடந்த ஏப்ரல் ஆறாம் தேதி உடல் நலக்குறைவால் காலமானார் புகழேந்தி. அப்போது லோக்சபா தேர்தல் நடைமுறைகள் தொடங்கியிருந்தன. இதனை தொடர்ந்து விக்கிரவாண்டி தொகுதி காலியாக இருப்பதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பை வெளியிட்டது. 




பதினெட்டாவது லோக்சபா தேர்தல் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி மே ஒன்றாம் தேதி வரை நடைபெற்றது. அப்போதே விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்கான அறிவிப்பு வெளியாகவில்லை. 


இந்த நிலையில் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் வரும் ஜூலை 10ம் தேதி தேதி நடைபெற இருப்பதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஜூன் 14ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் ஆரம்பமாக உள்ளது. மனுத் தாக்கல் செய்வதற்கு ஜூன் 21ஆம் தேதி கடைசி நாள் ஆகும். வேட்பு மனுக்கள்  ஜூன் 24ஆம் தேதி பரிசீலனை செய்யப்படும். பின்னர் மனுக்களை வாபஸ் பெற ஜூன் 26 ஆம் தேதி கடைசி நாள் ஆகும். வாக்குப் பதிவு ஜூலை 10ம் தேதி நடைபெறும், வாக்குகள் ஜூலை 13ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.