Vikravandi By elecion: நிறைவடைந்தது விக்கிரவாண்டி இடைத் தேர்தல்.. 82.48% வாக்குகள் பதிவு

Su.tha Arivalagan
Jul 10, 2024,06:18 PM IST

விக்கிரவாண்டி: விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டசபைத் தொகுதியில் இன்று விறுவிறுப்பாக வாக்குப் பதிவு தொடங்கி கடைசி வரை விறுவிறுப்பாகவே நடந்து முடிந்தது. மாலை 6 மணி வரை 82.48 சதவீத வாக்குகள் பதிவாகின. .


நாடு முழுவதும் 13 சட்டசபைத் தொகுதிகளுக்கு இன்று இடைத் தேர்தல் நடைபெற்றது. அதில் விக்கிரவாண்டியும் ஒன்றாகும். விக்கிரவாண்டியில் எம்எல்ஏவாக இருந்த திமுகவின் புகழேந்தி மரணமடைந்த காரணத்தால் அங்கு இடைத் தேர்தல் வந்துள்ளது. இதற்கான வாக்குப் பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கியது.


திமுக சார்பில் அன்னியூர் சிவா, பாமக சார்பில் சி. அன்புமணி, நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா உள்பட 29 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். ஜூலை 13ம் தேதி இங்கு பதிவாகும் வாக்குகள் எண்ணப்படும்.




மொத்தம் 276 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டு வாக்குப் பதிவு நடத்தப்பட்டது. இதில் 42 வாக்குப் பதிவு மையங்கள் பதட்டமானவையாகவும், 3 மையங்கள் மிகவும் பதட்டமானவை என்றும் அறிவிக்கப்பட்டன. அனைத்து வாக்குச் சாவடிகளிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டது. மத்திய படை பாதுகாப்பு உள்ளிட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. மாற்றுத் திறனாளிகள், முதியோர்களுக்கு வசதியாக ரேம்ப் வசதி உள்ளிட்டவை ஏற்படுத்தப்பட்டிருந்தன.


திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா முதல் ஆளாக வாக்குப் பதிவு செய்தார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயாவுக்கு இந்தத் தொகுதியில் வாக்கு கிடையாது. பாமக வேட்பாளர் அன்புமணி பனையபுரம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடியில் அவர் வாக்களித்தார். இடைத் தேர்தலையொட்டி விழுப்புரம் மாவட்டத்திற்கு இன்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


காலை முதலே வாக்குப் பதிவு விறுவிறுப்பாக நடந்து வந்தது. மக்கள் வெயிலையும் பொருட்படுத்தாமல் ஆர்வத்துடன் வந்து வாக்களித்தனர். மாலை 5 மணி நிலவரப்படி 77.73 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. கடந்த ஆண்டு கிட்டத்தட்ட 83 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. அந்த வாக்குப் பதிவை இந்த இடைத் தேர்தல் வாக்குப் பதிவு முந்தி விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.