பாட்டில்களைப் பொறுக்கிய செல்லப் பாண்டியன்.. பண மாலையோடு வந்த ஆழ்வார்.. களை கட்டும் விக்கிரவாண்டி

Meenakshi
Jun 14, 2024,06:49 PM IST

விழுப்புரம்:   விக்கிரவாண்டியில்  ஜூலை 10ம் தேதி இடைத்தேர்தல்  நடைபெறுகிறது. அதற்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கியுள்ளது. வரும் 21ம் தேதி வரை வேட்புமனுக்களை தாக்கல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் நாளே சுயேச்சை வேட்பாளர்கள் அலப்பறையை ஆரம்பித்து விட்டனர்.


விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதியில் அத்தொகுதியின் உறுப்பினராக இருந்து வந்த புகழேந்தி காலமானார். இதனை அடுத்து விக்கிரவாண்டி தொகுதியில் வரும் ஜூலை 10ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கியுள்ளது. வரும் 21ஆம் தேதி வரை வேட்பாளர்கள் வேட்பு மனுவினை  தாக்கல் செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை வரும் 24ம் தேதி நடைபெறும். மனுக்களை திரும்ப பெற வரும் 26ம் தேதி கடைசி நாள் ஆகும். அன்றே வேட்பாளர் இறுதிப்பட்டியல் வெளியிடப்படும். ஜூலை 10-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும். ஜூலை 13ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.




இந்நிலையில், விக்கிரவாண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கலுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தேர்தல் நடத்தும் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ள விழுப்புரம் மாவட்ட நுகர்வோர் அலுவலர் சந்திரசேகரிடம் வேட்பாளர்கள் தங்களது வேட்பு  மனுக்களை வழங்கலாம் என மாவட்ட ஆட்சியர் பழனி தெரிவித்துள்ளார்.


திமுக கூட்டணி 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்கான முன்னோட்டமாக இந்த இடைத்தேர்தலை கருதுகிறது. திமுக வேட்பாளராக மாநில விவசாய தொழிலாளர் அணி செயலாளர் அன்னியூர் சிவா அறிவிக்கப்பட்டுள்ளார். நாம் தமிழர் கட்சி சார்பில் டாக்டர் அபிநயா போட்டியிடுவார் என்று நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான்  அறிவித்துள்ளார். அதிமுக கட்சி இன்னும் ஓரிரு நாட்களில் வேட்பாளர்களை அறிவிக்கும் என்று தெரிகிறது. பாஜக கூட்டணியில் உள்ள பாமக,விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து ஆலோசனைக் கூட்டம் நேற்று திண்டிவனத்தில் நடத்தியது. இந்த கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அன்புமணி ராமதாஸ் கூறிகையில், இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து கட்சித் தலைவர்களுடன் பேசி முடிவெடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.


இன்று அஷ்டமி என்பதால் யாரும் வேட்பு மனு தாக்கல் செய்ய மாட்டார்கள் என்றும், நாளை முதல் திங்கட்கிழமை வரை விடுமுறை நாட்கள் என்பதால், வேட்பு மனுக்களை யாரும் தாக்கல் செய்ய மாட்டார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இன்று சில சுயேச்சைகள் மனு தாக்கல் செய்தனர். புதன்கிழமை தான் முக்கியக் கட்சிகளின் வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


பணமாலை - பாட்டில் பொறுக்கியபடி டெபாசிட் பணம் திரட்டல்




இதற்கிடையே ஆழ்வார் என்ற சுயேச்சை வேட்பாளர் டெபாசிட் தொகையை சில்லறையாகவும், ரூபாய் நோட்டாகவும் மாற்றி, ரூபாய் நோட்டுக்களை மாலை போல தனது கழுத்தில் போட்டுக் கொண்டு தனது ஆதரவாளர்களோடு வந்தார். அவரது வருகையே ஒரு தினுசாக இருந்தது. அவர் கொண்டு வந்த பணத்தையும் சில்லறையையும் அதிகாரிகள் டேபிளில் போட்டு எண்ணிப் பார்த்து பிறகு அவரது வேட்பு மனுவை பெற்றுக் கொண்டனர்.


இன்னொரு பக்கம் தமிழ்நாடு மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கத்தின் தலைவர் செல்லப் பாண்டியன் தனது பங்குக்கு ஒரு அலப்பறையைக் கொடுத்துக் கொண்டிருந்தார். அதாவது அவர் விதவைக் கோலத்தில், வீதி வீதியா சென்று காலி மது பாட்டில்களை பொறுக்கி எடுத்துக் கொண்டிருந்தார். ஏன் இப்படி என்று கேட்டபோது, டெபாசிட் கட்ட பணம் இல்லை. எனவே பாட்டில்களைப் பொறுக்கி காயலான் கடையில் போட்டால் கிடைக்கும் பணத்தை வைத்து டெபாசிட் கட்டப் போகிறோம் என்று கூறி விட்டு பாட்டில் பொறுக்கக் கிளம்பிச் சென்றார்.


இடைத் தேர்தல்தானே..தேர்தல் என்றாலே சாப்ட்டாக இருக்கும் என்று நினைத்து விடாதீர்கள்.. இப்படியும் உக்கிரமாத்தான் இருக்கும்.