விக்கிரவாண்டி.. பிரமாண்ட வெற்றியை நோக்கி திமுகவின் அன்னியூர் சிவா.. கொண்டாட்டத்தில் தொண்டர்கள்

Manjula Devi
Jul 13, 2024,01:20 PM IST

விழுப்புரம்: விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வரும் நிலையில், தற்போது வேட்பாளர் அன்னியூர் சிவா பிரமாண்ட வெற்றியை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறார். இதையடுத்து சென்னை, விழுப்புரம், விக்கிரவாண்டியில் திமுக தொண்டர்கள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.


திமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.


விக்கிரவாண்டி தொகுதியில் திமுக உறுப்பினராக இருந்த  புகழேந்தி உடல் நலம் பாதிக்கப்பட்டு மரணமடைந்த  நிலையில் 

அத்தொகுதியில் கடந்த 10ம் தேதி இடைத் தேர்தல் நடத்தப்பட்டது. இதில் திமுக சார்பில் அன்னியூர் சிவா, பாமக சார்பில் சி. அன்புமணி, நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா ஆகியோர் போட்டியிட்டனர். இவர்களுடன் 26 சுயேச்சை வேட்பாளர்களும்  போட்டியிட்டனர்.




இந்த நிலையில் விக்கிரவாண்டி தொகுதி இடைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது. தபால் வாக்குகள் தொடங்கி மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளிலும் தொடர்ந்து டாப்பில் இருந்து வருகிறார் திமுக வேட்பாளர் சிவா. ஒவ்வொரு சுற்றிலும் அவரது வாக்குகள் கிடுகிடுவென அதிகரித்துக் கொண்டே போகிறது. இதனால் அவர் பிரமாண்ட வெற்றியைப் பெறும் சூழல் ஏற்பட்டுள்ளது.


இந்த வெற்றியை திமுக தொண்டர்கள் பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் கொடுத்தும் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். சென்னை அண்ணா அறிவாலயத்தில் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் கொடுத்தும் தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடினர். முதல்வர் மு.க.ஸ்டாலினும் அறிவாலயத்திற்கு வருகை தந்தார். அவரும் இனிப்புகளைப் பரிமாறிக் கொண்டார்.