விக்கிரவாண்டி இடைத் தேர்தல்.. அதிமுக வாக்குகளை திமுக அள்ளிருச்சா?.. பரபரக்கும் ரிசல்ட்!

Su.tha Arivalagan
Jul 13, 2024,10:44 AM IST

விக்கிரவாண்டி:  விக்கிரவாண்டி சட்டசபை இடைத் தேர்தலை அதிமுக புறக்கணிப்பதாக அக்கட்சி பொதுச் செயலாளர்  எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருந்த நிலையில் அக்கட்சித் தொண்டர்கள் அதை மீறி வாக்களித்திருந்தனர். ஆனால் அந்த வாக்குகள் யாருக்குப் போயுள்ளன என்பது பெரும் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.


விக்கிரவாண்டி தொகுதியில் உறுப்பினராக இருந்தவர் திமுகவின் புகழேந்தி. மக்களவைத் தேர்தல் சமயத்தில் இவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு மரணமடைந்தார். இதையடுத்து அங்கு கடந்த 10ம் தேதி இடைத் தேர்தல் நடத்தப்பட்டது. இதில் திமுக சார்பில் அன்னியூர் சிவா, பாமக சார்பில் சி. அன்புமணி, நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா பொன்னிவளவன் ஆகியோர் போட்டியிட்டனர். இவர்கள் தவிர 26 சுயேச்சைகளும் களத்தில் நின்றனர்.




இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் திமுக பெற்று வரும் வாக்குகள் பலவித கேள்விகளை எழுப்புவதாக உள்ளன. கடந்த காலத்தில் திமுக வெற்றி பெற்றபோது, அது பெற்ற வாக்கு வித்தியாசங்களை தற்போதைய வேட்பாளர் அன்னியூர் சிவா தாண்டி விட்டார்.  இது முதல் ஆச்சரியம். 2வது கேள்வி, அதிமுக தேர்தலை புறக்கணித்ததாக அறிவித்த நிலையில், அதிமுக தொண்டர்கள் வாக்களித்த நிலையில் அந்த வாக்குகள் திமுகவுக்குப் போய் விட்டதா என்ற பெரும் கேள்வி எழுகிறது.


தற்போது பாமக சார்பில் போட்டியிட்டுள்ள சி. அன்புமணிக்கு ஆதரவாக, பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் பிரச்சாரம் செய்தபோது ஜெயலலிதா படத்தைப் போட்டுத்தான் பிரச்சாரம் மேற்கொண்டார். அதிமுகவினர் தங்களுக்கே வாக்களிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். தேமுதிகவினரும் வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். 


இப்போது போட்டியிட்ட சி. அன்புமணிதான் கடந்த 2016 தேர்தலிலும் போட்டியிட்டிருந்தார். அப்போது, அன்புமணி 41,428 வாக்குகள் பெற்றிருந்தார். அதாவது 23.19 சதவீத வாக்குகளை அவர் பெற்றார். அத்தேர்தலில் திமுகவின் ரத்தினமணி வெற்றி பெற்றிருந்தார். அதிமுகவுக்கு 2வது இடம் கிடைத்தது. வாக்கு வித்தியாசம் வெறும் 6912 மட்டுமே. அப்போது அதிமுக கடும் டஃப் கொடுத்திருந்தது. பாமகவும் வாக்குகளைப் பிரித்தது. இதன் காரணமாக பெரிய அளவிலான வெற்றி வித்தியாசத்தை திமுகவால் பெற முடியவில்லை.


2019 இடைத் தேர்தல் நிலவரம் வேறு கதையைச் சொன்னது. அப்போது அதிமுகவின் முத்தமிழச்செல்வன் - 1,13,766 வாக்குகள் பெற்று அதாவது மொத்தம் பதிவான வாக்குகளில் 60.29% வாக்குகளைப் பெற்று அபார வெற்றி பெற்றார். திமுகவின்  புகழேந்தி 68,842 வாக்குகளை அதாவது 36.48% வாக்குகளை மட்டுமே பெற்றார். 

நாதக வேட்பாளர் கந்தசாமிக்கு 2921  வாக்குகள் கிடைத்தன.


2021 பொதுத் தேர்தலில் திமுக வெற்றி பெற்றது. அப்போது வேட்பாளர்கள் பெற்ற வாக்கு விவரம்:


திமுக புகழேந்தி - 93,730 (48.69%)

அதிமுக முத்தமிழ்ச்செல்வன் - 84,157 (43.72%)

அமமுக அய்யனார் - 3053

நாம் தமிழர் ஷீபா அஸ்மி - 8216

வாக்கு வித்தியாசம் - 9573 மட்டுமே. ஆனால் தற்போது நிலைமை அப்படியே தலைகீழாகியுள்ளது.


இதுவரை திமுக விக்கிரவாண்டியில் பெற்ற வாக்கு வித்தியாசத்தை விட அதிக வாக்கு வித்தியாசத்தைப் பெற்று அபார முன்னிலை வகிக்கிறது. இதன் மூலம் விக்கிரவாண்டி தொகுதி அதிமுகவினர், திமுக பக்கம் போய் விட்டனரா என்ற கேள்வி எழுகிறது. வாக்கு எண்ணிக்கை முழுவதுமாக முடிந்த பிறகுதான் எந்த அளவுக்கு அதிமுக வாக்குகளை திமுக கவர்ந்துள்ளது, பாமக கவர்ந்துள்ளது என்பதை அறிய முடியும்.


2021 தேர்தலில் 82.04 சதவீத வாக்குப் பதிவு விக்கிரவாண்டியில் நடந்திருந்தது. ஆனால் தற்போதைய இடைத் தேர்தலில் அதை விட அதிகமாக அதாவது 82.48 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. அதிமுக வாக்குகளும் உரிய முறையில் பதிவாகியுள்ள நிலையில் அதை அறுவடை செய்ய பாமக தவறி விட்டதா என்ற கேள்வி எழுகிறது. சுற்றுக்கு சுற்று திமுகவின் வாக்கு வித்தியாசம் உயர்ந்து வருவதைப் பார்த்தால் பெருமளவிலான அதிமுகவினரின் வாக்குகள் திமுக பக்கம் போய் விட்டதாகவே தெரிகிறது. முழு முடிவு வரும்போதுதான் திமுக எந்த அளவுக்கு வாக்குகளைக் கவர்ந்துள்ளது என்பதை முழுமையாக அனுமானிக்க முடியும்.