2026 தேர்தலே இலக்கு.. அதற்காகத்தான் விக்கிரவாண்டியிலிருந்து வாக்அவுட்.. அதிமுக திட்டம் இதுதான்!

Su.tha Arivalagan
Jun 16, 2024,02:43 PM IST

சென்னை: 2026  சட்டசபைத் தேர்தலை மனதில் கொண்டே அதிமுக விக்கிரவாண்டி தொகுதியிலிருந்து வெளிநடப்பு செய்திருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள். அதாவது 2026 தேர்தலில் பாமகவை நம்ம கூட்டணிக்கு கொண்டு வந்து விட வேண்டும். அதற்காகத்தான் விக்கிரவாண்டியில் பாமகவுக்கு மறைமுகமாக ஆதரவு கொடுத்துள்ளது அதிமுக.


கிட்டத்தட்ட சின்ன மீனைப் போட்டு பெரிய மீனைப் பிடிக்கும் முயற்சி இது. இது எந்த அளவுக்கு பலன் தரும் என்று தெரியவில்லை. ஆனால் நிச்சயம் அதிமுக குறித்த பாமகவின் கோபப் பார்வையை அது குறைக்க உதவும் என்பது எடப்பாடி பழனிச்சாமி போடும் கணக்கு என்கிறார்கள்.


பாமக முக்கியம்




நடந்து முடிந்த லோக்சபா தேர்தல் அனைத்துக் கட்சிகளுக்கும் பல பாடங்களைக் கற்றுக் கொடுத்துள்ளது. நாம் தமிழர் கட்சிக்கும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கும் இந்தத் தேர்தல் புதிய அங்கீகாரத்தைக் கொடுத்துள்ளது. தேமுதிக இன்னும் வீழ்ந்து போகவில்லை, கொஞ்சம் உயிர் இருப்பதை உணர்த்தியுள்ளது. பாமகவுக்கு வட மாவட்டங்களில் இன்னும் செல்வாக்குப் போகவில்லை. பலமாகவே இருக்கிறது என்பதை உணர்த்தியுள்ளது.


அதிமுகவுக்கும், பாஜகவுக்கும் இனி தனித்துப் போட்டியிட்டால் வேலைக்கு ஆகாது.. கூட்டணி சேர்ந்தால் மட்டுமே நன்மை.. இல்லாவிட்டால் வாக்குப் பிரிப்பு மட்டுமே நடக்கும் என்ற முக்கியப் பாடத்தைக் கற்றுக் கொடுத்துள்ளது. இதனை உணர்ந்துதான் அதிமுக பாஜகவைச் சேர்ந்த தலைவர்கள் கூட்டணி சேர வேண்டும் என்று ஆசையை வெளிப்படுத்த ஆரம்பித்துள்ளனர். இரு கட்சிகளும் கூட்டணியில் மீண்டும் கை கோர்த்தால் கூட்டணி வலுவாகும் என்பது அவர்களது கருத்தாகும்.


சின்ன மீனைப் போட்டு பெரிய மீன்




இந்த நிலையில்தான் அதிமுக ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. பின்வாங்கி விட்டது, பயந்து விட்டது, பலமிழந்து விட்டது என்று எதிர்த் தரப்பினர் விமர்சித்தாலும் கூட இதில் ஒரு அரசியல் உத்தி ஒளிந்திருப்பதாக சொல்லப்படுகிறது. அதிமுக பாஜக கூட்டணியை பலவீனமாக்கும் திட்டம். 2026 தேரத்ல் நிச்சயம் கடுமையாக இருக்கும். திமுக முழு பலத்தையும் பிரயோகித்து மீண்டும் வெல்ல எத்தனிக்கும். அதிமுக கூட்டணியில் இப்போது வலுவான கட்சி என்று யாருமே இல்லை. தேமுதிக மட்டுமே சற்று செல்வாக்குடன் உள்ளது. ஆனால் பிரேமலதாவின் செயல்பாடுகள் பெரிய அளவில் உருப்படியாக இல்லை.


அதேசமயம், பாமக பலமாகவே உள்ளது. பெரிய அளவில் அதன் வாக்கு வங்கி சரியவில்லை. தர்மபுரியில் அது டஃப் பைட் கொடுத்துள்ளது. விருதுநகரில் தேமுதிகவுக்கு உயர்வு கொடுத்தது அதிமுக வாக்கு வங்கிதான். அதேசமயம், தர்மபுரியில் பாமகவுக்கு பலம்   கொடுத்தது கண்டிப்பாக பாஜக வாக்கு வங்கி அல்ல, மாறாக பாமகவே அங்கு பலமாகத்தான் உள்ளது. திமுகவின் கடுமையான போட்டி காரணமாக அங்கு பாமகவால் வெல்ல முடியாமல் போய் விட்டது. ஒரு வேளை பாஜகவின் வாக்கு வங்கி பலமாக இருந்திருந்தால் நிச்சயம் பாமகவால் ஜெயித்திருக்க முடியும்.


வட மாவட்ட வாக்குகள்




இதை வைத்துத்தான் அதிமுக ஒரு கணக்கு போடுகிறது. தேமுதிகவும் கூட்டணியில் இருக்கட்டும்.. அதேசமயம், பாமகவும் கூட்டணிக்குள் வர வேண்டும். அப்படி நடந்தால் வட மாவட்டங்களில் பாமக, தேமுதிகவுக்கு ஆதரவாக உள்ள வன்னியர் வாக்கு வங்கி முழுமையாக அதிமுக கூட்டணிக்குக் கிடைக்கும் என்பது அதன் கணக்காகும். மேற்கு மண்டலத்தில் அதிமுகவும், வடக்கு மண்டலத்தில் பாமகவின் பலமும், தெற்கில் தேமுதிகவுக்கு உள்ள வாக்குகளும் அதிமுகவுக்கு நிச்சயம் உயர்வு கொடுக்கும் என்று கணக்கு போடுகிறார் எடப்பாடியார்.


இதனால்தான் விக்கிரவாண்டியில் போட்டியிலிருந்து விலகுவதாக அவரிடமிருந்து அறிவிப்பு வந்துள்ளது. இது நிச்சயம் பாமகவுக்கு கை கொடுக்கும். பாமகவின் பலத்தை உயர்த்தும். அதிமுக வாக்குகள் கணிசமாக பாமகவுக்கு போகும். மறைமுகமாக பாமகவுக்கு இப்படி உதவுவதன் மூலம், கவருகிற சட்டசபைத் தேர்தலில் அதிமுக கூட்டணிக்குள் பாமகவை இழுக்க முடியும் என்று நம்புகிறாராம் எடப்பாடி பழனிச்சாமி. லோக்சபா தேர்தலில் அதிமுக கூட்டணியில் கிட்டத்தட்ட இடம் பெறும் நிலைக்கு வந்து விட்டது பாமக. ஆனால் பாஜகவிடமிருந்து அழுத்தம், கோரிக்கை அதிகமாக இருந்ததால் வேறு வழியில்லாமல் பாஜக பக்கம் பாமக போனதாக சொல்கிறார்கள்.


எனவே சட்டசபைத் தேர்தலில் பாமகவையும் கூட்டணிக்குள் கொண்டு வந்து விட்டால் அதிமுகவுக்கும் பலம், பாமகவுக்கும் அது லாபமே தரும் என்பது அதிமுகவின் கணக்கு.. இந்தக் கணக்கு எப்படி பலிக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.