விக்கிரவாண்டியில் நாளை வாக்குப்பதிவு.. விரல்களுடன் காத்திருக்கும் வாக்காளர்கள்.. ஏற்பாடுகள் தயார்!

Meenakshi
Jul 09, 2024,09:20 PM IST

விழுப்புரம்:   விக்கிரவாண்டி தொகுதியில் நாளை இடைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் தீவிரமாக செய்து வருகிறது.


2024ம் ஆண்டிற்கான மக்களவைத்தேர்தல் முடிந்த நிலையில், தேர்தல் முடிந்த கையோடு விக்கிரவாண்டியில் இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி விக்கிரவாண்டி இடைத் தேர்தலுக்கு கடந்த 14ம் தேதி வேட்பு மனுத் தாக்கல் தொடங்கிய நிலையில், 24ம் தேதி வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்றது. மொத்தம் 64 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதில் 35 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. அதன்பின்னர் கடந்த மாதம் 26ம் தேதி இறுதி கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. 29 வேட்பாளர்கள் விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் களம் காண்கின்றனர்.




இத்தேர்தலில் திமுக சார்பாக அன்னியூர் சிவா, பாமக சார்பாக சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சி சார்பாக அபிநயா மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் என 29 பேர் களத்தில் உள்ளனர். தமிழ்நாட்டின் முக்கிய எதிர்க்கட்சியான அதிமுக விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது. அதேபோல தேமுதிகவும் புறக்கணித்துள்ளது. ஆனால் இந்த இரு கட்சிகளின் வாக்குகளில் கணிசமானவை பாமக வேட்பாளருக்குப் போகலாம் என்று பாமகவும், பாஜகவும் நம்பிக்கையுடன் உள்ளன.


விக்கிரவாண்டி சட்டமன்ற தொதியில் கடந்த 20 நாட்களாக தேர்தல் பிரச்சாரம் நடைபெற்று வந்தது. நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் முடிவடைந்தது. இதையடுத்து இன்று ஓய்வு நாள். நாளை வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. அதற்கான பணிகளில் தேர்தல் ஆணையம் முழுவீச்சில் செயல்பட்டு வருகிறது. துணை ராணுவம், காவல்துறையினர் மூலம் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு நாளன்று, விழுப்புரம் மாவட்டம் முழுவதும் பொது விடுமுறை விடப்பட்டுள்ளது. தொகுதிக்குட்பட்ட அனைத்துப் பகுதிகளிலும் தொழில் மற்றும் அலுவலகங்களில் பணியாற்றுவோருக்கு ஊதியத்துடன் கூடிய உள்ளூர் விடுமுறை விடப்படும். விக்கிரவாண்டி தொகுதிக்கு உள்பட்டு வரக்கூடிய அனைத்து அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டு இருக்கும் என்றும்  அறிவிக்கப்பட்டுள்ளது.


நாளை காலை 7 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. வாக்காளர்கள் அனைவரும் தங்களது வாக்குகளை தவறாமல் பதிவு செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையம் வேண்டுகோள் விடுத்துள்ளது. வாக்காளர்களுக்காக 260 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளது. ஒவ்வொரு வாக்குச்சாவடிகக்கும் 2 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மேலும் பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. 10ம் தேதி பதிவாகும் வாக்குகள் 13ம் தேதி எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்படும்.