ஷ்ஷ்ஷ்ஷ்.. நைட் வந்தாச்சு.. ரோவரும், லேண்டரும் தூங்கறாங்க.. இஸ்ரோ உருக்கம்!

Su.tha Arivalagan
Sep 03, 2023,02:59 PM IST

ஸ்ரீஹரிகோட்டா: நிலவில் தற்போது இரவு நேரம் என்பதால் விக்ரம் லேண்டரும், பிரக்யான் ரோவரும் தங்களது பணிகளை முடித்துக் கொண்டு தூக்க நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.



நம்முடைய பூமியில் 24 மணி நேரம் என்பது பகல் 12 மணி நேரம், இரவு 12 மணி நேரம் என்பதை உள்ளடக்கியதாகும். இதுவே நிலவில் எப்படி என்றால் பகல் நேரமானது 14 நாட்களாகவும், இரவு நேரம் என்பது 14 நாட்களையும் உள்ளடக்கியதாகும். அதாவது நமக்கு 24 மணி நேரம் ஒரு நாள் என்றால், நிலாவில் 28 நாட்கள்தான் ஒரு நாள் கணக்காகும்.


இப்போது நமது சந்திரயான் 3 நிலவில் போய் இறங்கியுள்ள நேரத்தில் அங்கு இரவு தொடங்கியுள்ளது. இந்த இரவானது, நமது பூமியின் கணக்குப்படி 14 நாட்கள் நீடிக்கும். எனவேதான் சீனா நம்மை கேலி செய்தபோது, ஒரு இரவைத் தாண்டுமா சந்திரயான் 3 பார்க்கலாம் என்று நக்கலடித்திருந்தது.




இந்த இரவைத்தான் தற்போது விக்ரம் லேண்டரும், பிரக்யான் ரோவரும் சந்தித்துள்ளனர். அவர்கள் போய் இறங்கிய நிலையில் தற்போது இரவு தொடங்கியுள்ளதால் இருவருக்கும் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. ரோவரும், லேண்டரும் தூக்க நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட வேலைகளை சிறப்பாக முடித்துள்ளதைத் தொடர்ந்து தற்போது இருவரும் தூக்க நிலையில் உள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.


இதுகுறித்து இஸ்ரோ வெளியிட்டுள்ள டிவீட்டில்,  ரோவர் தனது வேலைகளை முடித்து விட்டது. தற்போது பாதுகாப்பாக அது பார்க் செய்யப்பட்டுள்ளது.  ஸ்லீப் மோடில் அது உள்ளது. APXS மற்றும் LIBS  பேலோடுகள் ஆப் செய்யப்பட்டுள்ளன. இவற்றிலிருந்து வரும் தகவல்கள் லேண்டர் மூலமாக பூமிக்கு வரும்.


தற்போது பேட்டரி முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் உள்ளது. சோலார் பேனல்களுக்கு அடுத்த சூரிய உதயத்தின்போதுதான் மீண்டும் ஒளி கிடைக்கும். அதாவது செப்டம்பர் 22ம் தேதிதான் சூரிய உதயம் வருகிறது. அப்போது மீண்டும் சோலார் பேனல்களுக்கு ஒளி கிடைக்கும். ரிசீவர் ஆன் செய்யப்பட்ட நிலையில் உள்ளது. 


இரவு முடிந்து ரோவரும், லேண்டரும் வெற்றிகரமாக விழித்தெழுவார்கள், மீண்டும் பணியைத் தொடருவார்கள் என்று நம்புகிறோம். அப்படி இல்லாமல் போனால், இந்தியாவின் நிலவு தூதர்களாக அங்கேயே நீடித்திருப்பார்கள் என்று இஸ்ரோ உருக்கமாக கூறியுள்ளது.