கேப்டனுக்கு கிடைத்த ஆதரவு எனக்கும் கிடைக்கும்.. நம்பிக்கை இருக்கு.. விஜயபிரபாகரன் உற்சாகம்!

Meenakshi
Mar 23, 2024,04:12 PM IST

சென்னை: கேப்டன் இல்லாத இந்த தருணத்திலும் கேப்டனின் பிரதிபலிப்பாக தான் என்னை பார்க்கிறார் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள். நிச்சயம் இது ஒரு வெற்றிக் கூட்டணி தான். கேப்டனுக்கு கிடைத்த ஆதரவு எனக்கும் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது என்று விருதுநகர் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் பேட்டி அறித்துள்ளார்.


விருதுநகர் தொகுதியில் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் போட்டியிடவுள்ளார். இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:




தேர்தலில் நிற்பது என்பது ஒரு சவால் தான். எனக்கு இது முதல் தேர்தல். கேப்டன் எங்களை விட்டு பிரிந்து 3,4 மாதங்கள் ஆகின்றன. இருந்தாலும் அந்த சம்பவத்தில் இருந்து நாங்கள் மீண்டும் இன்னும் வரவில்லை. இருந்தாலும் நாடாளுமன்ற தேர்தல் வருகிறது. அதற்கான தேர்தல் பணிகளை செய்ய வேண்டும். எங்களது கட்சிக்காரர்கள் நிர்வாகிகள் எல்லாருமே நான் தேர்தலில் நிற்க வேண்டும் என்று பொதுச்செயலாளரிடம் கேட்டார்கள். 


கடந்த தேர்தலில் மிகக்குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தோம். இருந்தாலும் எங்க தாத்தா ஊரு, எங்க சொந்த ஊரு என்பதினாலும், எல்லாரும் வேண்டிக் கேட்டதினாலும், விருப்பத்திற்கு ஒரு வேட்பாளராக வேண்டி நிறுத்தி இருக்கிறார்கள். அந்த ஆதரவை நான் பூர்த்தி செய்யணும்னு நினைக்கிறேன். தேர்தல் பிரச்சாரத்திற்கு 2019ல் போய்யிருக்கேன். அங்க உள்ள பிரச்சனைகள் எனக்கு தெரியும். 

இப்ப வேட்பாளராக அறிவித்ததினால் நான் இன்னும் கூர்மையாக கவனிக்க நிறை விஷயங்கள் இருக்கு. எங்க கட்சிக்காரர்களுடன் பேசிக் கொண்டு உள்ளோம். அங்கு என்ன பிரச்சனைகள் எதுவாக இருந்தாலும் கேப்டனின் குரல் எப்படி சட்டசபையில் ஒலித்ததோ அதைப் போல என்னுடைய குரலும் பாராளுமன்றத்தில் ஒலிக்கும். மக்களுக்கு என்ன தேவையோ அதை பூர்த்தி செய்வதற்காக நாங்க இருக்கோம். 




கேப்டனின் வழியில் தான் தேமுதிக. நான் அவருடைய பிள்ளை. அவருடைய ரத்தம். நான் இறங்கும் அந்த தொகுதியில் 100க்கு 1000 சதவீதம் சரியா மக்களுக்கு போய் சேரும். இப்போதைக்கு விருதுநகர் தொகுதியில் மட்டும் தான் என்னுடைய பிரச்சாரம் இருக்கும். விருதுநகரில் இருக்கும் மக்களுக்கு ஒரு மகனாக இருந்து அவர்கள் தேவைகளை நிறைவேற்றி கொடுப்பேன்.


போன தேர்தலில் வாக்குகள் சிதறி இருந்தது. இப்ப அதிமுக கூட்டணியில்   தேமுதிக இருப்பதால் வாக்குகள் சிதற வாய்ப்பு இல்லை. அதிமுக தேமுதிக ஒரு வெற்றி கூட்டணி தான் . ஒரு நல்ல மரியாதையும் நட்பும் இருக்கு. கேப்டன் இல்லாத இந்த தருணத்திலும் கேப்டனின் பிரதிபலிப்பாக தான் என்னை பார்க்கிறார் எடப்பாடி அவர்கள். நிச்சயம் இது ஒரு வெற்றிக் கூட்டணி தான். கேப்டனுக்கு கிடைத்த ஆதரவு எனக்கும் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது என்று கூறியுள்ளார்.