உட்கார முடியலை.. கையைத் தூக்க முடியலை.. தடுமாறிய விஜயகாந்த்.. அழுத தொண்டர்கள்!

Su.tha Arivalagan
Aug 25, 2023,12:04 PM IST

சென்னை: சரியாக உட்காரக் கூட முடியலை.. கைகளை சரியாக தூக்கி காட்டக் கூட முடியவில்லை. தடுமாறி காணப்பட்ட தேமுதிக தலைவர் விஜயகாந்த்தைப் பார்த்து தொண்டர்கள் பலரும் கண்ணீர் விட்டு அழுதனர்.


தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் 71வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி அவர் தேமுதிக தலைமைக் கழக அலுவலகத்திற்கு வருவார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால் பல்வேறு மாவட்ட தொண்டர்களும் கோயம்பேடு தலைமைக் கழக அலுவலக வளாகத்தில் திரண்டிருந்தனர். அந்த இடமே திருவிழாக் கோலம் பூண்டு காணப்பட்டது.


இந்த நிலையில் காலை பத்தரை மணிக்கு மேல் விஜயகாந்த் அங்கு அழைத்து வரப்பட்டார். அவரை ஒரு சோபாவில் உட்கார வைத்திருந்தனர். முகத்தில் மாஸ்க் போட்டிருந்தார். வழக்கம் போல கூலிங் கிளாஸ் போட்டிருந்தார்கள். ஒரு காலத்தில் சிங்கம் போல முழங்கி வந்த விஜயகாந்த் மிகவும் பொலிவிழந்து உடல் நலிந்த நிலையில் காணப்பட்டது தொண்டர்களை வேதனைப்பட வைத்தது.


விஜயகாந்த்தால் சரியாகக் கூட உட்கார முடியவில்லை. நிலையாக உட்கார முடியாததால் ஆளுக்கு ஒரு பக்கமாக அவரை பிடித்துக் கொண்டிருந்தனர். தலையும் சரியாக நிற்கவில்லை. மேல் நோக்கி பார்த்தபடியே இருந்தார். அவ்வப்போது அவரது தோள்பட்டையைத் தொட்டு தொண்டர்களைப் பார்க்குமாறு மனைவி பி ரேமலதா விஜயகாந்த் கூறியபடி இருந்தார். அவரும் பார்த்து கைகளை ஆட்டினார். மேலே கைகளை உயர்த்தி தம்ஸ் அப் காட்டினார்.


இதே நிகழ்ச்சியில் அவரது மகன் சண்முகப்பாண்டியன் நடிக்கும் அடுத்த படத்தின் பூஜை விழாவிலும் காணொளி மூலமாக கலந்து கொண்டார் விஜயகாந்த். எதிரிகளை துவம்சம் செய்து பந்தாடிய நம்ம கேப்டன் இப்படி ஆயிட்டாரே என்று அவரைப் பார்த்த தொண்டர்கள் பலரும் அழுததைக் காண முடிந்தது.