Vijayakanth: "கேப்டன்" விரைவில் வீடு திரும்புவார்.. வதந்திகளை பரப்பாதீர்கள்.. பிரேமலதா விஜயகாந்த்

Su.tha Arivalagan
Dec 02, 2023,10:01 PM IST

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் நலமாக ஆரோக்கியமாக இருக்கிறார். அவரைப் பற்றி தயவு செய்து வதந்தி பரப்பாதீர்கள். தயவு செய்து மனித நேயத்தோடு அதை நிறுத்திக்கங்க என்று அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார்.


தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் 2 வார காலத்திற்கு சிகிச்சையில் இருப்பார் என்று சில நாட்களுக்கு முன்பு அவர் அனுமதிக்கப்பட்டுள்ள மியாட் மருத்துவமனை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது.


இந்த நிலையில் இன்று இரவு மீண்டும் விஜயகாந்த் உடல் நலம் குறித்து சிலர் செய்தி பரப்பி வந்தனர். இதைத் தொடர்ந்து விஜயகாந்த்தின் மனைவி பிரேமலதா விஜயகாந்த் ஒரு வீடியோ மூலம் விஜயகாந்த் நலமாக இருப்பதாக தெரிவித்துள்ளார். அவர் ஆரோக்கியமாக இருப்பதாகவும், விரைவில் வீடு திரும்புவார் என்றும் பிரேமலதா விஜயகாந்த் அதில் தெரிவித்துள்ளார்.




நாங்கள் அத்தனை சொல்லியும் சிலர் தொடர்ந்து வதந்தி பரப்புவது எங்களது குடும்பத்துக்கு மன உளைச்சல் தருவதாகவும், மனிதநேயத்தோடு நடந்து கொள்ளுங்கள், தயவு செய்து வதந்தி பரப்பாதீர்கள். கேப்டன் குறித்து வரும் வதந்திகளை யாரும் நம்பாதீர்கள் என்றும் பிரேமலதா விஜயகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


இதற்கிடையே,  விஜயகாந்த்துடன் பிரேமலதா விஜயகாந்த், அவரது மகன் சண்முகப் பாண்டியன் ஆகியோர் இருப்பது போன்று புகைப்படங்களும் வெளியாகியுள்ளன. அப்புகைப்படத்தில் வழக்கமாக அணியும் கூலிங் கிளாஸுடன், விஜயகாந்த் படுக்கையில் அமர்ந்திருக்கிறார். இந்தப் புகைப்படம் விஜயகாந்த் தொண்டர்களுக்குப் பெரும் ஆறுதலை அளிப்பதாக உள்ளது.