தேமுதிக தலைவர் விஜயகாந்த் மியாட் மருத்துவமனையில் அனுமதி.. ஓரிரு நாளில் வீடு திரும்புவார்!
சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வழக்கமான உடல் நல பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த 2016ம் ஆண்டு உடல் நிலை பாதிக்கப்பட்டது முதல் தீவிர அரசியலில் ஈடுபடாமல் பெரும்பாலும் ஓய்வில்தான் இருந்து வருகிறார். கட்சிப் பணிகளை அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த், மகன் பிரபாகரன் ஆகியோர்தான் பார்த்துக் கொள்கின்றனர்.
வீட்டிலேயே ஓய்விலும், சிகிச்சையிலுமாக இருந்து வரும் விஜயகாந்த் அவ்வப்போது வெளிநாட்டுக்கும் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்படுகிறார். இந்த நிலையில் இன்று அவர் திடீரென சென்னை மியாட் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். அவர் வழக்கமான பரிசோதனைக்காக அவர் அழைத்து வரப்பட்டிருப்பதாக கட்சித் தலைமையிலிருந்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
ஓரிரு நாட்கள் அவர் மருத்துவமனையில் இருப்பார் என்றும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் தேமுதிக சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
சமீபத்தில்தான் கட்சி தலைமை அலுவலகத்திற்கு விஜயகாந்த் அழைத்து வரப்பட்டிருந்தார். அவரைப் பார்க்க தொண்டர்கள் அலை மோதினர். விஜயகாந்த் மிகவும் நலிவடைந்த நிலையில் இருப்பதைப் பார்த்து தொண்டர்கள் பலர் அழுததையும் பார்க்க முடிந்தது.