ஆரோக்கியமாக இருந்திருந்தால்.. மிகப் பெரிய சக்தியாக வந்திருப்பார் விஜயகாந்த் - ரஜினிகாந்த்

Su.tha Arivalagan
Dec 29, 2023,07:39 PM IST

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆரோக்கியமாக இருந்திருந்தால் தமிழ்நாட்டு அரசியலில் மிகப் பெரிய சக்தியாக வந்திருப்பார் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.


தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் உடல் தீவுத்திடலில் வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக நாகர்கோவிலிலுருந்து தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வந்து அங்கிருந்து விமானம் மூலம் நடிகர் ரஜினிகாந்த் சென்னைக்குக் கிளம்பினார்.




விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் ரஜினிகாந்த் பேசுகையில், அன்பு நண்பர் விஜயகாந்த் அவர்களை இழந்தது மிகப் பெரிய துரதிர்ஷ்டம். மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு. விஜயகாந்த் அசாத்தியமான மன உறுதி உள்ள மனிதர். எப்படியாவது தேறி வந்து விடுவார் என்று ரொம்ப நம்பிக்கையோட இருந்தோம். ஆனால்  சமீபத்தில் தேமுதிகவோட பொதுக்குழுக் கூட்டத்தில் அவரைப் பார்த்தபோது நம்பிக்கை போய் விட்டது.


அவர் ஆரோக்கியமாக இருந்திருந்தால் தமிழக அரசியலில் மிகப்பெரிய சக்தியாக வந்திருப்பார். தமிழ்நாட்டுக்கு நிறைய செய்திருப்பார். அந்த பாக்கியத்தை தமிழ் மக்கள் இழந்திருக்கோம். அவரது ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறேன் என்றார் ரஜினிகாந்த்.


வேட்டையன் படப்பிடிப்புக்காக ரஜினிகாந்த் நாகர்கோவில் போயிருந்தார்.  தற்போது அதை ரத்து செய்து விட்டு அவர் இன்று சென்னை வருகிறார். தீவுத்திடலில் வைக்கப்பட்டுள்ள விஜயகாந்த் உடலுக்கு ரஜினிகாந்த் தனது மனைவி லதா ரஜினிகாந்த்துடன் வந்து அஞ்சலி செலுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


வாய் நிறைய ரஜினியை அண்ணன் என்று கூப்பிடுவார் விஜயகாந்த். திரையுலகில் எங்களுக்கு மூத்தவர், பெரியவர் என்று மிகவும் மரியாதையுடன் ரஜினியை  பேசுவார். திரையுலகப் பிரச்சினைகள் எதுவாக இருந்தாலும் ரஜினியுடன் ஆலோசனை நடத்துவதையும் வழக்கமாக வைத்திருந்தார். நடிகர் சங்கத் தலைவராக இருந்தபோது ரஜினி, கமல் போன்ற பெரும் நடிகர்களை மலேசியாவுக்கு  கலை நிகழ்ச்சிக்கு அழைத்துச் சென்று, மொத்தத் திரையுலகையும் மேடையில் ஏற்றி அசத்தலான நிகழ்ச்சியை நடத்திய சாதனை விஜயகாந்த்துக்கு மட்டுமே உண்டு.