பெண்களுக்கும் தலைமை பண்புகள் இருக்கிறது என்பதை உணர்ந்த கட்சி பாஜகதான்..  விஜயதரணி

Meenakshi
Feb 26, 2024,05:12 PM IST

கோவை: பெண்களுக்கும் தலைமை பண்புகள் இருக்கிறது என்பதை உணர்ந்த கட்சி தான் பாரதிய ஜனதா  கட்சி. அதனால்தான் அதில் நான் இணைந்தேன் என்று கோவை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார் காங்கிரஸிலிருந்து விலகி பாஜகவில் இணைந்த விஜயதரணி.


சமீபத்தில், காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்து விட்டார் விளவங்கோடு எம்எல்ஏவாக இருந்த விஜயதரணி. காங்கிரஸ் சார்பில் மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்தவர் அவர்.  சட்டசபையில் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற முதன்மை கொறடாவாகவும் இருந்தார்.




இந்தநிலையில், 24ம் தேதி டெல்லியில், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தலைமையில் பாஜகவில் இணைந்தார் விஜயதரணி.  மேலும் தனது எம்எல்ஏ பதவியையும் அவர் ராஜினாமா செய்து விட்டார். சிறு வயது முதலே காங்கிரஸ் கட்சியில் இருந்து வந்ததாகவும், தன்னை பாஜகவில் சேரும் நிலைக்கு காங்கிரஸ் தள்ளி விட்டுள்ளதாகவும் கூறியுள்ளார் விஜயதரணி. 


பாஜகவில் இணைந்த பிறகு தமிழ்நாடு திரும்பிய அவர் பல்லடம் பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக கோவை வந்துள்ளார். கோவை வந்த அவர் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசும்போது, இன்னும் நிறைய சர்ப்ரைஸ் இருக்கிறது. பெண்களுக்கு என்ன செய்ய வேண்டும்  என்று காங்கிரஸ்  முயற்சி எடுக்க வேண்டும். அவர்கள் அதைச் செய்யவில்லை. அதனால், அவரவர்கள் வழியை பார்த்து தான் போவார்கள். 


காங்கிரஸ் கட்சியில் இருந்து கபில்சிபல், குலாம் நபி ஆசாத், ஜி.கே.வாசன் போன்ற நிறைய பேர் கட்சியில் இருந்து விலகியுள்ளார்கள். நாட்டுக்கும் மக்களுக்கும் பணியாற்ற முடியாது என்ற அச்சத்தினாலும் அதிகமானவர்கள் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகியுள்ளார்கள். என்னை பொறுத்தவரை நாட்டு மக்களுக்காக உறுதியாக பணியாற்ற வேண்டும். நான் தேர்தல் அரசியலில் 14 வருடங்கள் இருந்துள்ளேன். 


மக்களை அணுகி எளிதில் செயல்படக்கூடிய பெண்ணாக இருக்க வேண்டும். அந்த வழியை காங்கிரஸ் அடைத்ததாக தான் நான் பார்க்கிறேன். எல்லா தளத்திலும் பெண்களுக்கான வாயிலை  அடைக்கிறார்கள். என்னை பொருத்தவரை பாரதிய ஜனதா கட்சி பெண்களுக்கு நீண்ட வழியை பயணிக்க ஏற்படுத்திக் கொடுக்கிறது. அதிகமான பெண்கள் பாரதிய ஜனதா கட்சியில் உள்ளனர். இன்னும்  ஏராளமானோர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாரதிய ஜனதா கட்சியில் சேரும் நிலை ஏற்படும். 




தலைவர் நட்டா அவர்கள்  தலைமையில் பாரதப் பிரதமர் மோடி அவர்களுடைய வழிகாட்டுதலில் என்னை நான் இணைத்துக் கொண்டேன். பல ஆண்டுகாலம் காங்கிரஸ் கட்சியில் பணியாற்றி இருக்கிறேன்.  ஆனால், நிறைய பிரச்சனைகள், பெண்களுக்கு உண்டான தளம் என்பது காங்கிரஸ் கட்சியில் மறுக்கப்பட்டதாகவே உள்ளது. என்னை கூட தக்க வைத்துக் கொள்ள முடியாத நிலையில் தான் காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகள் உள்ளது. 


அரசியல் தளத்தில் பணியாற்றும் பெண்களுக்கு மிகவும் அதிகமான சிரமம் ஏற்படுத்துகிறது. 37 ஆண்டுகள் காங்கிரஸ் கட்சியை தொடர்ந்து பணியாற்றி இருக்கின்றேன். எந்த கட்சிக்கும் போகவில்லை. எந்த ஆதாயமும் இல்லாமல் வேலை பார்த்தவர் நான். இந்த முடிவுக்கு வருவதற்கு காரணம் இருக்கின்றது. தலைமை பதவி எதுவும் பெண்களுக்கு வழங்கப்படவில்லை. 


பெண்களுக்கு அங்கீகாரம் இல்லை என்றால் எப்படி அவர்கள் அந்த கட்சிக்கு போவார்கள்.  காங்கிரஸ் கட்சியில் இந்த நிலைப்பாடு காரணமாக கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகளாகவே அங்கீகாரம் என்பது மறுக்கப்பட்டதாகவே இருக்கிறது. என்னைப் போன்று பல ஆண்டுகள் உழைத்தவர்களுக்கே அங்கீகாரம் மறுக்கப்படுகிறது. ஆனால், பாஜகவில் எவ்வளவு பெண்கள் எம்பிக்களாக உள்ளார்கள். பெண்களுக்கும் தலைமை பண்புகள் இருக்கிறது என்பதை உணர்ந்த கட்சி தான் பாஜக கட்சி. அதனுடைய வெளிப்பாடு தான் என்னுடைய நிலைப்பாட்டிற்கு காரணம். அதனால் தான் நான் இன்று என்னை பாரதியா ஜனதா கட்சியில் இணைத்துக் கொண்டேன் என்று கூறியுள்ளார்.