விருதுநகரில் விஜயபிரபாகரன்.. கள்ளக்குறிச்சியில் சுதீஷ்.. தேமுதிக டிக்கெட் கேட்டு விருப்ப மனு தாக்கல்

Meenakshi
Mar 20, 2024,03:30 PM IST

சென்னை: தேமுதிக சார்பில் விருதுநகரில் விஜயபிரபாகரனும், கள்ளக்குறிச்சியில் சுதீசும் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்துள்ளனர். அனேகமாக இவர்களே அங்கு வேட்பாளர்களாக போட்டியிடுவார்கள் என்று தெரிகிறது.


தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியுள்ளது. 


பல நாட்களாக இழுபறியாக இருந்த அதிமுக-தேமுதிக இடையேயான கூட்டணி பேச்சு வார்த்தை இன்று தான் முடிவுக்கு வந்துள்ளது. அதிமுக சார்பில் தேமுதிகவுக்கு 5 தொகுதிகளும், புதிய தமிழகம் மற்றும் எஸ்டிபிக்கு தலா ஒரு தொகுதியும் ஒதுக்கீடு செய்துள்ளதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். மேலும் 16 வேட்பாளர்கள் கொண்ட முதல் பட்டியலையும் அவர் வெளியிட்டுள்ளார்.




இதில் புதிய தமிழகம் கட்சிக்கு தென்காசி (தனி) தொகுதியும், எஸ்.டி.பி.ஐ கட்சிக்கு திண்டுக்கல் தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தேமுதிகவுக்கு எந்தெந்த தொகுதிகள்?


விருதுநகர், கள்ளக்குறிச்சி, கடலூர், திருச்சி, மத்திய சென்னை ஆகிய 5 தொகுதிகளை அதிமுக தேமுதிகவிற்கு ஒதுக்கியுள்ளதாக தெரிகிறது. தேமுதிக சார்பில் லோக்சபா தேர்தலில் போட்டியிட விரும்புவோர் விருப்ப மனு அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து நேற்று விஜயகாந்த்தின் நினைவிடத்தில் வைத்து வணங்கிவிட்டு பிரேமலதா விஜயகாந்த் விருப்ப மனு வழங்கினார்.


இந்நிலையில், இன்று  தேமுதிக சார்பில் விருதுநகர் தொகுதியில் போட்டியிட அவரது மகன் விஜயபிரபாகரன் விருப்பம் தெரிவித்து விருப்ப மனு வழங்கியுள்ளார். அவரை தொடர்ந்து பிரேமலதா விஜயகாந்த்தின் தம்பி சுதிசும் விருப்ப மனு வழங்கியுள்ளார்.  எந்த தொகுதி தெரியுமா? கள்ளக்குறிச்சி தொகுதிக்கு விருப்பமனு வழங்கியுள்ளார். இதன் காரணமாக விருதுநகர் தொகுதியில் விஜயபிரபாகரனும், கள்ளக்குறிச்சி தொகுதியில் சுதிசும் போட்டியிடுவார்கள் என தெரிகிறது.