விஜய் டிவி "புகழ்".. காமெடி  நடிகராக இருந்து... கதை நாயகனாக.. புது அவதாரம் சூப்பர்ல!

Manjula Devi
Jan 12, 2024,04:30 PM IST

சென்னை: ஆரம்ப காலகட்டத்தில் விஜய் டிவி நிகழ்ச்சியின் மூலம் ட்ரெண்டான நடிகர் புகழ், படிப்படியாக உயர்ந்து இப்போது கதை நாயனாகியுள்ளார்.


விஜய் டிவி புகழ் சிறந்த காமெடியனாகவும், குணச்சித்திர வேடங்களிலும், நடித்து புகழ்பெற்றவர். தற்போது நாயகனாக அவதாரம் எடுத்துள்ளார். ஜே சுரேஷ் இயக்கத்தில் மிஸ்டர் ஜு கீப்பர் என்ற படத்தில் நாயகனாக அறிமுகமாகிறார் புகழ்.  இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். 


நடிகர் புகழ் புலியுடன் பயத்தில் உட்கார்ந்தது இருப்பது போல் இப்படத்தின் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. விரைவில் டீசர் வெளியாகவுள்ளது.




புகழேந்தி என்ற புகழ் ஒரு சிறந்த நகைச்சுவையாளர். இவர் விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர் மனதில் இடம் பிடித்தவர். இதன் பின்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி ஷோ மூலம் பிரபலமானவர். குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடிகை ரம்யா பாண்டியன், ரித்திகா, சிருஷ்டி டாங்கே, தர்ஷா குப்தா போன்ற சக போட்டியாளர்களுடன் கலந்து கொண்டு அசத்தினார். 

இவர் இந்த நிகழ்ச்சியில் பெண் போட்டியாளர்களுடன் இணைந்து போடும் மொக்கை காமெடி மூலமாக பாப்புலராக திகழ்ந்தார். இந்த நிகழ்ச்சியின் மூலம் உலக அளவில் ரசிகர்களை கவர்ந்தவர்.  அதிலும் பெண் வேடத்தில், பெண் குரலில் பேசி கலகலப்பை கிளப்புவதில் புகழ் கில்லாடி.


பின்னர் விஜய் டிவியில் பல்வேறு நகைச்சுவை ஷோகளில் பங்கேற்று தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர். இவரை ரசிகர்கள் விஜய் டிவி புகழ் என்று செல்லமாக அழைத்தனர். அப்போதிலிருந்து இப்போது வரை இவருக்கு விஜய் டிவி புகழ் என்ற பெயரே நினைத்து விட்டது. இதன்பிறகு தனது திறமையை படிப்படியாக உயர்த்திக் கொண்ட இவர் வெள்ளித்திரையில் சிறு சிறு காமெடி ரோலில் நடித்து சிறந்த காமெடி நடிகராக வலம் வந்தார்.




கடந்த 2022 ஆம் பென்சியை காதலித்து திருமணம் செய்தார். தனது காதல் மனைவியுடன் உள்ள போட்டோக்கள் மற்றும் வளைகாப்பு போட்டோக்கள் என சோசியல் மீடியாவில் அவ்வப்போது வெளியிட்டு வந்தார். இந்தப் புகைப்படங்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து ட்ரெண்ட் ஆனது.


சமீபத்தில் மறைந்த நடிகர் விஜயகாந்த் நினைவிடத்திற்கு சென்ற புகழ் அஞ்சலி செலுத்திவிட்டு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில் நான் என் அலுவலகத்தில் உள்ள  50 பேருக்கு தினமும் மதிய உணவு அளிப்பேன் என சபதம் எடுத்தார். சென்னைக்கு முதன் முதலில் வேலை தேடி வந்த போது சாப்பாட்டிற்கு கூட வழியில்லாமல் இருந்தேன். அதனால் விஜயகாந்த் சார் பிறருக்கு உதவிய பணியை நான் தொடர போகிறேன். என்னை போல் சாப்பாடு இல்லை என்று வருவோருக்கு சாப்பாடு அளிக்க உள்ளேன். 


இது பற்றிய வீடியோவை விரைவில் என்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிடுவேன் எனவும் தெரிவித்தார். இதன் மூலம் இவர் ஒரு சிறந்த நடிகராக மட்டுமில்லாமல்  மற்றவருக்கு உதவி செய்யும் சேவகராகவும் விளங்கி வருகிறார்.


நகைச்சுவை நடிகர் புகழ் கடலூர் மாவட்டத்தில் 1990 ஆம் ஆண்டு ஒரு ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர். வீட்டு சூழ்நிலை காரணமாக தனது பள்ளி படிப்பை பாதியுடன் நிறுத்திவிட்டு மெக்கானிக்காக தனது வாழ்க்கை பயணத்தை தொடங்கியவர். பின்னர் பிழைப்பிற்காக சென்னை வந்தார். அப்போது விஜய் டிவியில் நடைபெற்ற கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி ஆடிஷனில் கலந்து கொண்டு, தனது கடின உழைப்பின் காரணமாக படிப்படியாக உயர்ந்தார்.


தற்போது வெள்ளித்திரையில்  காமெடி நடிகராக வலம் வரும் புகழுக்கு அடுத்த கட்ட உயர்வு வந்திருப்பது, அவரைப் போலவே உயரத் துடிக்கும் பலருக்கும் சிறந்த செய்தியாகும்.. புகழ் மேலும் உயரட்டும்!