"2026.. கப்பு  முக்கிய பிகிலு".. அரசியல் பிரவேசம் குறித்து மறைமுகமாக ..பேசிய விஜய்!

Su.tha Arivalagan
Nov 02, 2023,12:19 PM IST

சென்னை: லியோ பட சக்ஸஸ் மீட்டில், விஜய்யின் பேச்சு, விஜய் அரசியலுக்கு வருவார் என மறைமுகமாக உணர்த்துவதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த லியோ படம் கடந்த அக்டோபர் 19ஆம் தேதி ரிலீஸ் ஆனது. இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.  நடுத்தர வயதுடைய அப்பா கதாபாத்திரத்தில் விஜயின் நடிப்பு பிரபலமாக பேசப்பட்டு வந்தது. லியோ படம் 600 கோடிக்கு மேல் வசூலில் சாதனை படைத்தது.




லியோ படத்தின் வெற்றி விழா நவம்பர் 1ஆம் தேதி நடைபெறும் என அறிவித்ததில் இருந்தே, ரசிகர்கள் விஜய் என்ன குட்டி ஸ்டோரி சொல்லுவார் என எதிர்பார்ப்பாத்து  காத்திருந்தனர். இந்நிலையில் இப்படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில், லியோ படத்தின் சக்ஸஸ் மீட் நேற்று நேரு ஸ்டேடியத்தில் கோலாகலமாக நடைபெற்றது.


இதில் விஜய் மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். அவரது பேச்சு ரசிகர்களை தெறிக்க விட்டுள்ளது.


விஜய் பேசும்போது, காடு என்றால் சிங்கம் ,புலி ,மயில், காக்கா, கழுகு... என எல்லாம் இருக்கும் என்ன பேச ஆரம்பித்தார். அப்போது ரசிகர்கள் கர ஒலியால் அரங்கையே அதிர வைத்தனர்.  விஜய்யால் பேசவே முடியவில்லை.. சிரித்தபடி சிறிது நிமிடம் ரசிகர்களின் கரகோஷத்தை ரசித்தார். 


பின்னர் தனது கதையைத் தொடர்ந்தார்...  அந்தக் காட்டிற்குள் இரண்டு வேடர்கள் வில் மற்றும் அம்பு கொண்டு சென்றனர். அதில் வில் எடுத்துச் சென்றவர் முயலை குறிபார்த்து வேட்டையாடி வெற்றி பெற்றார். ஈட்டி எடுத்துச் சென்றவர் யானையை குறிப்பார்த்தார். ஆனால் அவர் வச்ச குறி தப்பி வெறும் கையுடன் வந்தார். இதில் யார் வெற்றியாளர் என கேட்டால்.. நிச்சயமாக யானையை குறி வைத்தவர் தான் வெற்றியாளர். எப்பவுமே பெரிய விஷயத்திற்காக இலக்கை நிர்ணயங்கள் .தோல்வி அடைந்தாலும் பெரிய இலக்கை கொண்டவர் தான் வெற்றியாளர்  என்றார் விஜய்.


குட்டி ஸ்டோரி முடிந்ததும் தொகுப்பாளர் டிடி ஒரு ரேபிட் பயர் வைத்தார். அவர் கேள்விகள் கேட்க விஜய் பதிலளித்துக் கொண்டே வந்தார். அப்போது 2026 இல் என்ன நடக்கும் என கேள்வி கேட்டார்.  அதற்கு விஜய், 2026ல் கால்பந்து போட்டி நடக்கும். கப்பு முக்கியம் பிகிலு.. என பதிலளித்தார். இதைக் கேட்டதும் ரசிகர்கள் மீண்டும் அரங்கத்தையே அதிர வைத்தனர்.




2026ம் ஆண்டுதான் தமிழ்நாடு சட்டசபைக்குத் தேர்தல் நடக்கப் போகிறது. இதைத்தான் மறைமுகமாக டிடி கேட்டார்.. அதற்கு விஜய்யும் மறைமுகமாக தேர்தல் முக்கியம்.. என்பதை சுட்டிக் காட்டிப் பதிலளித்தார்.. அதாவது தான் அரசியலுக்கு வரப் போவதையும், அதில் நாம் வெற்றி பெறுவது முக்கியம் என்பதையும் ரசிகர்களுக்கு மறைமுகமாக உணர்த்திப் பேசினார் விஜய்.


இதைத்தான் தற்போது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். "எங்கள் தளபதிக்காக உயிரைக் கூட கொடுப்போம். கண்டிப்பாக அவரை வெற்றி பெறச் செய்வோம் எனவும் ரசிகர்கள் உறுதி கூறுகின்றனர். ஏற்கனவே விஜய் அரசியலுக்கு வருவதற்கு வசதியாக, விஜயகாந்த் பாணியில், ரசிகர்  மன்றங்களை அரசியல் அமைப்பாக மாற்றும் முயற்சியில் இறங்கியுள்ளனர். ஒவ்வொரு அமைப்பாக உருவாக்கிக் கொண்டுள்ளனர்.


இந்தப் பின்னணியில்தான், தற்போது கப்பு முக்கியம் பிகிலு என்று தனது வசனத்தையே ரசிகர்களுக்குப் பதிலாக அளித்துள்ளார் விஜய்.