நாடு முழுவதும் நாளை முதல் நம்ம கொடி பறக்கும்.. தமிழ்நாடு சிறக்கும்.. மாஸ் என்ட்ரி கொடுக்கும் விஜய்

Su.tha Arivalagan
Aug 21, 2024,04:43 PM IST

சென்னை : விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் கொடி அறிமுக நிகழ்ச்சி ஆகஸ்ட் 22ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் கொடி அறிமுகம் குறித்து அதிகாரப்பூர்வ அறிக்கை ஒன்றை விஜய் இன்று வெளியிட்டுள்ளார். அவரது அறிக்கையில் இடம் பெற்றுள்ள வாசகங்களால் ரசிகர்களிடையே அனல் பறக்க ஆரம்பித்துள்ளது.


நடிகர் விஜய் தமிழக வெற்றிக்  கழகம் என்ற கட்சியை சமீபத்தில் துவங்கினார். இந்த கட்சியின் கொடி அறிமுக நிகழ்ச்சி ஆகஸ்ட் 22ம் தேதி காலை 09.15 மணிக்கு சென்னை பனையூரில் உள்ள கட்சியின் தலைமை நிலையச் செயலகத்தில் நடைபெற உள்ளது. இது தொடர்பாக செம மாஸான அறிக்கை ஒன்றை விஜய் இன்று வெளியிட்டுள்ளார்.


அதில் அவர், என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களே...சரித்திரத்தின் புதிய திசையாகவும் புதிய விசையாகவும் ஒவ்வொரு நாளும் அமைந்தால் அது ஒரு பெரும் வரம். அப்படியான வரமாக இறைவனும் இயற்கையும் நமக்கு அமைத்துக் கொடுத்திருக்கும் நாள் தான் 2024, ஆகஸ்ட் 22. 




நம் தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய அடையாளமான கொடி அறிமுகமாகும் நாள். தமிழ்நாட்டின் நலனுக்காக உழைத்து, நம் மாநிலத்தின் அடையாளமாகவும் மாறப் போகும் நம் வீரக் கொடியை, வெற்றிக்கொடியை நாளை நம் தலைமை நிலையச் செயலகத்தில் அறிமுகப்படுத்தி, கழகக் கொடிப் பாடலை வெளியிட்டு, கழகக் கொடியை ஏற்றி வைக்கிறோம் என்பதை பெரு மகிழ்வுடன் அறிவிக்கிறேன். 


நாளை முதல் நாடெங்கும் நமது கொடி பறக்கும். தமிழ்நாடு இனி சிறக்கும். வெற்றி நிச்சயம் என குறிப்பிட்டு விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார். கட்சி தலைவராக அவர் வெளியிட்டுள்ள இந்த அறிக்கை அரசியல் வட்டாரத்திலும், சினிமா வட்டாரத்திலும் செம டிரெண்டாகி வருகிறது.


கட்சியின் தீம் சாங்கை கவிஞர் விவேக் எழுதியிருப்பதாகவும் இசையமைப்பாளர் தமன் அதற்கு இசையமைத்திருப்பதாகவும் ஏற்கனவே தகவல் வெளியாகி ரசிகர்களை உற்சாகத்தில் மூழ்கடித்துள்ளது. இந்த நிலையில் நாளை முதல் நம்ம கொடி பறக்கும் என்று விஜய் தனது ஸ்டைலில் பன்ச்சாக கூறியிருப்பது ரசிகர்களை டபுள் மகிழ்ச்சியில் திளைக்க வைத்துள்ளது. நாளை பனையூர் பகுதி எப்படி கலங்கப் போகிறதோ.. பொறுத்திருந்து பார்ப்போம்.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்