தென் மாநிலங்களுக்கான நாடாளுமன்ற தொகுதி மறுவரையறை.. பெரும் தண்டனையே.. விஜய் அறிக்கை!
சென்னை: 50 ஆண்டுகளாக கல்வி, சுகாதாரம் மற்றும் குடும்ப கட்டுப்பாட்டில் முதலீடு செய்து மக்கள் தொகை வளர்ச்சியை திறம்பட கட்டுப்படுத்தியுள்ள தமிழ்நாடு மற்றும் இதர தென் மாநிலங்களுக்கான நாடாளுமன்ற தொகுதி மறு வரை பெரும் தண்டனையே என தவெக தலைவர் விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
திமுக தலைவர் முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையில் இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறுகிறது. இதில் தொகுதி மறு சீரமைப்பு தொடர்பாக விவாதிக்கப்பட உள்ளது. இதற்காக தேர்தல் ஆணையத்தால் பதிவு செய்யப்பட்ட 45 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில் பல்வேறு கட்சியை சேர்ந்தவர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்கின்றனர்.குறிப்பாக தமிழக வெற்றி கழகம் சார்பில் அக்கட்சி பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கலந்து கொள்ள இருக்கிறார்.
இந்த நிலையில் நாடாளுமன்ற தொகுதி மறு சீரமைப்பு தொடர்பாக தமிழக வெற்றி கழகத்தின் நிலைபாடு என்ன என்பது குறித்து அக்கட்சி தலைவர் விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது,
நமது அரசியல் சாசனத்தின் 84 வது சட்ட திருத்தத்தின்படி, நாடாளுமன்ற தொகுதிகளின் மறு சீரமைப்பு 2026 ஆம் ஆண்டு வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எனவே வரும் ஆண்டிற்கு பிறகு இந்த மறுசீரமைப்பு பணி ஒன்றிய அரசால் தொடங்கப்பட வாய்ப்புள்ளது. எவ்வகையில் இந்த மறுசீரமைப்பு நடைபெறும் என்பது பற்றி எந்த ஒரு தெளிவான விளக்கமும் வாக்குறுதியோ மாநிலங்களுக்கு இதுவரை வழங்கப்படவில்லை.
தற்போதைய நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கையை மாற்றாமலோ அல்லது இன்னொரு அரசியல் சட்ட திருத்தத்தின் மூலம் நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கையை உயர்த்தியோ இந்த மறுசீரமைப்பு நடைபெறலாம்.எந்த முறையை பின்பற்றினாலும் இதில் மாநிலங்களின் மக்கள் தொகை என்பது ஒற்றை அளவுகோலாக இல்லாவிடினும் முக்கிய அளவுகோலாக இருக்கும் என்பது பட்டவர்த்தமான உண்மை.
நாம் அரசியல் சாசன 81 வது சட்டப்பிரிவு நாட்டில் உள்ள ஒவ்வொரு மக்களவை உறுப்பினரும் கூடுமானவரையில் சம- எண்ணிக்கையிலான மக்களுக்கு பிரதிநிதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறது (equal population representation for each MP). இதற்கு அடிப்படையிலான
one vote one value என்பது ஒரு ஜனநாயகக் கோட்பாடு. ஆனால் அதே சமயம் இந்தியா போன்ற பன்முகத் தன்மை கொண்ட கூட்டாட்சி நாட்டில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் சமமான பிரதிநிதித்துவத்துவம் இருக்க வேண்டும் என்பதும் ஒரு முக்கியமான ஜனநாயக கோட்பாடாகும். இந்த இரு கோட்பாடுகளையும் முடிந்தவரையில் ஒன்று மற்றொன்றை அதிகம் பாதிக்காத வகையில் நடைமுறைப்படுத்த முயல வேண்டும்.
புதிதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு அதன் அடிப்படையில் மட்டுமே அல்லது புதிய மக்கள் தொகையை ஒரு முக்கிய அளவுகோலாகக் கொண்டோ நிகழ்த்தப்படும் நாடாளுமன்ற தொகுதி மறு சீரமைப்பில் தென் மாநிலங்களுக்கான பிரதிநிதித்துவம் வெகுவாக குறையும் ஆபத்து உள்ளது.
கடந்த 50 ஆண்டுகளாக கல்வி, சுகாதாரம், மற்றும் குடும்ப கட்டுப்பாட்டில் முதலீடு செய்து தனது மக்கள் தொகை வளர்ச்சியை திறம்பட கட்டுப்படுத்தியுள்ள தமிழ்நாடு மற்றும் இதர தென் மாநிலங்களுக்கு இது ஒரு பெரும் தண்டனையே அன்றி வேறு இல்லை. ஏற்கனவே ஒரு மாநிலத்தில் இருந்து மட்டும் 80 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதால் அது மற்ற மாநிலங்களை விட கூடுதல் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக விளங்குகிறது. இந்த வேறுபாடு மேலும் அதிகரிக்க கூடாது. தென் மாநிலங்களுக்கு ஒப்பீட்டளவில் தொகுதிகள் மேலும் குறைக்கப்பட்டாலோ அல்லது உத்திரபிரதேசம், பீகார் போன்ற வளர மாநிலங்களுக்கு ஒப்பீட்டளவில் கூடுதலாக தொகுதிகள் ஒதுக்கப்பட்டாலோ அது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது ஆகும்.
இந்த நிலையில் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் மக்களவையில் 888 இருக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதைப் பார்த்தால் ஒன்றிய அரசு நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கையை உயர்த்தும் நீண்ட கால திட்டத்தில் இருந்ததாகவே தெரிகிறது. அப்படி நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரித்து ஒருவேளை தென் மாநிலங்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் ஒவ்வொரு மாநிலத்திலும் தற்போது உள்ள விகிதாச்சார அடிப்படையிலேயே தொகுதிகளை பிரித்து கொடுத்தாலும் அதுவும் ஒரு உகந்த முன்னெடுப்பாக அமையாது.
ஏனென்றால்
1. தற்போது 543 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கும்போதே அனைத்து உறுப்பினர்களுக்கும் கேள்வி நேரங்களில் கேள்வி கேட்க அனுமதி கிடைப்பதில்லை.Ballot முறையிலேயே கேள்வி கேட்க தேர்ந்தெடுக்கப்பட்டு வாய்ப்பு வழங்கப்படுகிறது. அப்படியே வாய்ப்பு வழங்கப்பட்டாலும் பெரும்பாலும் சில நிமிடங்களுக்கு மேல் பேச அனுமதி மறுக்கப்படுகிறது. இத்தகைய சூழ்நிலையில் மேலும் உறுப்பினர்களை சேர்த்துக்கொண்டு அவர்கள் நாடாளுமன்ற வளாகத்தில் வெறும் அலங்கார பொம்மைகளாக இருப்பதில் என்ன பலன்..?
2. மக்களின் இன்றைய அடிப்படை பிரச்சனைகள் விலைவாசி உயர்வு, வேலையின்மை, தரமான கல்வி மற்றும் சுகாதார வசதியின்மை, சாலை மற்றும் குடிநீர் வசதியின்மை, போன்றவை தான். நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்களின் பற்றாக்குறை என்பது ஒரு மக்களின் பிரச்சனையே இல்லை. Shortage of MPS is not at all a problem being faced by an ordinary citizen. it is democratic issue in principle and not a principal democratic issue. அதைவிட மிக முக்கியமான ஜனநாயகம் சார்ந்த பல பிரச்சினைகள் நாட்டில் இருப்பதை நான் கீழே விவரித்து இருக்கிறேன் அவற்றை களைவது தான் நம் முதன்மை பணியாக இருக்க வேண்டும் என பதிவிட்டுள்ளார்.