என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

Aadmika
Sep 19, 2024,02:39 PM IST

சென்னை :   வழக்கமாக விஜய்யின் அடுத்த படம் என்ன, விஜய்யை அடுத்து இயக்க போவது யார், அந்த படத்தின் கதை என்னவாக இருக்கும், விஜய்யின் அடுத்த பட அப்டேட் எப்போது வரும் என்று தான் வழக்கமாக அவரது ரசிகர்கள் எதிர்பார்ப்பார்கள், சோஷியல் மீடியாவில் கமெண்ட் செய்வார்கள். ஆனால் விஜய் அரசியல் கட்சி துவங்கியதில் இருந்து அவரது அரசியல் என்ட்ரி தான் ரசிகர்களின் மிகப் பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது. 


விஜய், தமிழக வெற்றிக் கழகம் கட்சியை துவங்கியது, கட்சியின் கொடி மற்றும் பாடலை வெளியிட்டது, முதல் மாநாட்டை நடத்துவதற்காக அறிவிப்பு வெளியிட்டது, முதல் மாநாட்டை போலீசார் கூறி உள்ள விதிமுறைகளுக்கு உட்பட்டு நடத்துவதற்கு போராடி வருவது, மாநாடு தேதி தள்ளி போவது, மற்றொரு புறம் விஜய்யின் அடுத்த படம் பற்றிய அறிவிப்பு, கோட் படத்தின் அப்டேட் ரசிகர்கள் ஒவ்வொன்றையும் கவனமாக கவனித்து வருகிறார்கள். முதல் மாநாட்டின் புதிய தேதியை விஜய் எப்போது அறிவிப்பார்? முதல் மாநாட்டை ஏற்கனவே அறிவித்த இடத்தில் நடத்துவார்களா அல்லது இடத்தை மாற்றுவார்களா? என ஆர்வம் அதிகரித்து வருகிறது.




இவற்றை எல்லாம் மிஞ்சும் அளவிற்கு விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி தமிழக அரசியலிலேயே எதிர்பார்ப்பை கிளப்பி உள்ளது, முதல் மாநாட்டில்  விஜய் பேச போகும் பேச்சு தான். விஜயகாந்த், கமல் போன்றவர்களுக்கு அவர்கள் முதல் மாநாடும், அதில் அவர்கள் பேசிய பேச்சும் தான் அரசியலில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த், தன்னுடைய முதல் மாநாட்டில் பேசிய வார்த்தைகள் தான் அவருக்கு அடுத்தடுத்த தேர்தல்களில் வெற்றிகளையும், தமிழக அரசியலில் அழுத்தமான இடத்தையும் பெற்றுத் தந்தது. அதே போல் அரசியல் கட்சி தலைவராக விஜய்யின் அரசியல் உரை எப்படி இருக்கும் என்பதை கேட்க அனைவரும் ஆர்வமாக உள்ளனர்.


ஆனால் விஜய்யின் நடவடிக்கைகள் கிட்டத்தட்ட ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு விதமான ஹார்ட் அட்டாக்கைக் கொடுக்க ஆரம்பித்திருக்கிறது போலும்.. பாஜகவும் அதிருப்தியுடன் பேசுகிறது.. திமுக தரப்பிலும் விஜய்யை முழுசாக நம்ப முடியாமல் சற்று தூரத்திலிருந்தே பார்க்கிறார்கள்.. இதற்கெல்லாம் காரணம், விஜய்யின் அரசியல் அணுகுமுறைகள்தான்.


ரம்ஜான், பக்ரீத், ஓணம், தலைவர்கள் பிறந்த நாள், சுதந்திர தினம், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம் போன்றவற்றிற்கு எதிர்ப்பு, அறிக்கை என தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் வழக்கமான அரசியல் கட்சி தலைவர்களை போல் விடாமல் பதிவிட்டு வருகிறார். இதில் ஹைலைட் என்னவென்றால் சமீபத்தில் தந்தை பெரியாரின் பிறந்த நாளில் படத்திற்கு மாலை அணிவித்து, பூ போட்டு அஞ்சலி செலுத்தி விட்டு வந்தது தான். இதைப் பார்த்த பாஜகவினர், "அட போங்கப்பா...இவரும் எல்லார போலவும் தான் இருக்கார்" என  புலம்ப ஆரம்பித்துள்ளனர்.


விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை என்று பாஜகவினர் பகிரங்கமாகவே விமர்சிக்க ஆரம்பித்து விட்டனர். பெரியார் நினைவிடம் போய் விட்டு வந்ததும் இன்னும் கோபமாகி விட்டனர் பாஜகவினர். ஆனால் மறுபக்கம் பிரதமர் நரேந்திர மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்ததன் மூலம் திமுக தரப்பும், விஜய்யை விமர்சித்து வருகிறது. மேலும் விஜய்யின் எழுச்சி திமுக தரப்புக்கே பெரும் பாதகமாக அமையும் என்பதாலும் திமுகவும் முழுமையாக விஜய்யை ஆதரிக்க முடியவில்லை. விமர்சித்தால்தான் அவர்களது இருப்பை தக்க வைக்க முடியும் என்ற நிலையில் திமுக உள்ளது.


முதல்வன் படத்தில் அர்ஜூன் சொல்வது போல், "கடைசியில இவரும் அரசியல்வாதி ஆகிட்டாரே" , "முழுசா மாறி இருக்குற விஜய்" என பலவிதங்களில் நெட்டிசன்கள் கமெண்ட்களை பதிவிட்டு வருகிறார்கள். ஆக மொத்தம் அரசியலில் முழுமையாக இறங்காமலேயே பலரையும் கதற விட ஆரம்பித்திருக்கிறார் விஜய் என்றுதான் சொல்ல வேண்டும். இன்னும் அவர் ஒரு கூட்டத்தில் கூட அரசியல் தலைவராக பேசவே இல்லை என்பதும் இங்கு முக்கியமானது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்