விஜய் அரசியல் ஸ்டார்ட்.. 234 தொகுதிகளிலும் விஜய் பயிலகம் தொடக்கம்

Su.tha Arivalagan
Jul 14, 2023,04:48 PM IST

சென்னை: நடிகர் விஜய்யின் அரசியல் நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன. ஜூலை 15ம் தேதி முதல் தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டசபைத் தொகுதிகளிலும் விஜய் பயிலகம் தொடங்கப்படுவதாக விஜய் மக்கள் இயக்கம் அறிவித்துள்ளது.


நடிகர் விஜய் அரசியலில் குதிக்கப் போவதற்கான முஸ்தீபுகளில் இறங்கியுள்ளார். இதுதொடர்பான நடவடிக்கைகளில் அவரது விஜய் மக்கள் இயக்கம் தீவிரம் காட்டி வருகிறது. சமீபத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தல்களில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ரசிகர்கள் சுயேச்சையாக போட்டியிட்டனர். கணிசமான வெற்றியையும் பெற்றனர்.




இந்த நிலையில் விஜய்யே நேரடியாக விரைவில் அரசியலில் இறங்கப் போவதாக சமீப காலமாக பரபரப்பாக பேசப்படுகிறது. இந்தப் பின்னணியில்தான் சமீபத்தில் தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் 10 மற்றும் 12வது வகுப்புகளில் முதல் மூன்று  இடங்களைப் பிடித்த மாணவ, மாணவியருக்கு பரிசுகளை வழங்கிக் கெளரவித்தார் நடிகர் விஜய். இது பெரும் பேசு பொருளானது.


இதையடுத்து அடுத்த கட்ட நடவடிக்கையில் விஜய் மக்கள் இயக்கம் இறங்கியுள்ளது. பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாள் சனிக்கிழமை கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் தனது அடுத்த கட்ட நடவடிக்கையை விஜய் மக்கள் இயக்கம் தொடங்குகிறது.


இதுதொடர்பாக விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்து  வெளியிட்டுள்ள அறிக்கையில், 




தளபதி விஜய்  அவர்களின் சொல்லுக்கிணங்க, பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு ஜூலை 15- ஆம் தேதி சனிக்கிழமை அன்று தமிழ்நாடு முழுவதிலும் உள்ள அவரின்

திருஉருவச் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி அந்நாளில் மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகம், பேனா, பென்சில் வழங்குதல் போன்ற நலத்திட்ட உதவிகளை வழங்குமாறு விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு,  தெரிவித்துக் கொள்கிறேன்.


மேலும் பெருந்தலைவர் காமராஜர் அவர்களை போற்றும் வகையில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தொகுதிகளிலும்  தளபதி விஜய் பயிலகம் ஆரம்பிக்கப்பட உள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.


அரசியலை நோக்கிய அடுத்தடுத்த நடவடிக்கைகளில் ��டிகர் விஜய் இறங்கியிருப்பதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். விஜய் பயிலகம் தொடக்கம்.. எதிர்காலத்தில் விஜய்யின் நாளைய செய்தியாக அமைய வேண்டும் என்ற முஸ்தீபுடன் காமராஜர் பிறந்த நாளை தடபுடலாக கொண்டாட களம் குதித்துள்ளனர்.