"நான் ரெடிதான்.. அண்ணன் நான் வரவா வரவா".. அடுத்த அதிரடிக்கு தயாராகும் விஜய்!

Su.tha Arivalagan
Aug 01, 2023,05:00 PM IST
சென்னை : மாணவர்களை தொடர்ந்து வழக்கறிஞர்கள் அணியும் துவங்கி, அரசியல் என்ட்ரிக்கு அடுத்த அடியை முன்னெடுத்து வைத்துள்ளார் நடிகர் விஜய். இதனால் விஜய் ரசிகர்கள் செம குஷியாகி உள்ளனர்.

விஜய் நடித்த லியோ படம் அக்டோபர் மாதம் தான் ரிலீசாக உள்ளது. அதற்கு முன் தளபதி 68 பட அப்டேட்டை எதிர்பார்ப்பதை விட விஜய்யின் அடுத்த அரசியல் மூவ் என்ன என்பதை தெரிந்து கொள்ள தான் அனைவரும் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். 

இதை விஜய் ரசிகர்கள் மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழக அரசியல் வட்டாரமே கவனிக்க துவங்கி உள்ளது. சமீபத்தில் தொகுதி வாரியாக பத்தாம் வகுப்பு, ப்ளஸ் 2 தேர்வுகளில் முதலிடம் பிடித்த மாணவர்களை சென்னைக்கு அழைத்து பேசி, தனது அரசியல் என்ட்ரிக்கு அழுத்தமான அடித்தளம் அமைத்தார் விஜய்.



தற்போது விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் புதிதாக வழக்கறிஞர் பிரிவு துவங்கப்பட்டுள்ளது. சென்னையில் வரும் சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் வழக்கறிஞர்கள் பிரிவின் ஆலோசனை கூட்டம் நடக்க உள்ளது. பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்க அலுவலகத்தில் பொதுசெ செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.

இதுவரை மாவட்ட நிர்வாகிகள் ஆலோசவை கூட்டம் மட்டுமே நடைபெற்று வந்த நிலையில் தற்போது புதிய அணி உருவாக்கப்பட்டு, நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தப்பட உள்ளது. மாவட்ட வாரியாகவும் வழக்கறிஞர் பிரிவு துவங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் விஜய் அடுத்து என்ன செய்ய போகிறார் என அரசியல் கட்சிகள் அனைவரும் ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

அடுத்தடுத்து திட்டமிட்டு ஒவ்வொரு காயாக நகர்த்தி வருகிறார் விஜய். அவர் எப்போது அரசியல் கட்சியின் பெயரை வெளியிடுவார், என்ன மாதிரியான திட்டம் வைத்துள்ளார் என்பதுதான் இப்போது அனைத்துத் தரப்பினரின் எதிர்பார்ப்பாக உள்ளது. எப்போது அவரது அறிவிப்பு வெளியாகும் என்பதும் கூட பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.