"என்னுடைய உச்சம்.. உனக்கேன் அச்சம்".. ரஜினியை சீண்டிய மதுரை விஜய் ஃபேன்ஸ்!

Su.tha Arivalagan
Aug 06, 2023,03:05 PM IST
மதுரை: ஜெயிலர் பட விழாவில் காக்கா பருந்து கதை கூறிய நடிகர் ரஜினிகாந்த்தை சீண்டி மதுரையில் விஜய் ரசிகர்கள் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டது.

சமீபத்தில் ஜெயிலர் பட ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. மிகப் பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் நிகழ்ச்சி நடந்தது. அதில் ரஜினிகாந்த்தின் பேச்சு சலசலப்பையும், பரபரப்பையும் ஏற்படுத்துவதாக அமைந்தது. காக்காய் - பருந்து கதை ஒன்றை அந்த விழாவின்போது ரஜினிகாந்த் கூறினார்.



அதில் அவர் கூறிய காக்கா என்பது நடிகர் விஜய்யைத்தான் குறிப்பிடுவதாக பரபரப்பு நிலவுகிறது. ரஜினிகாந்த் பொதுவாக சக நடிகர்களை, குறிப்பாக போட்டியாளர்களை இப்படியெல்லாம் விமர்சித்து பேசியதில்லை. ஆனால் இந்த முறை அவர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி விட்டது. 

இந்த நிலையில் மதுரையில் விஜய் ரசிகர்கள் ஒரு போஸ்டரை ஒட்டியுள்ளனர். இது ஜெயிலர் பட  ரஜினி பேச்சை விட பரபரப்பாகி விட்டது. அந்த போஸ்டரில், விஜய்யின் ஆடியோ வெளியீட்டு விழா படத்தைப் போட்டுள்ளனர். இன்னொரு பக்கம் ரஜினி படம் உள்ளது.  நடுவே, "என்னுடைய உச்சம்.. உனக்கு ஏன் அச்சம்.. என் நெஞ்சில் குடியிருக்கும்  இளைய தளபதி தளபதி என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது. மதுரை மண்ணின் மைந்தன் விஜய் அண்ணா ரசிகர்கள் என்று போஸ்டரை தயாரித்தவர்கள் பெயர் இடம் பெற்றுள்ளது.

இந்த போஸ்டரால் ரஜினி ரசிகர்கள் டென்ஷனாகியுள்ளனர். பல இடங்களில் ரஜினி ரசிகர்கள் போஸ்டர்களை கிழித்து எறிந்துள்ளனர்.