Vijay: "நாளைய முதல்வர் நீயே".. மதுரைக்காரங்க குசும்பை பார்த்தீங்களா!

Meenakshi
Oct 05, 2023,12:50 PM IST

மதுரை: மதுரைன்னாலே போஸ்டர்கள்தான்.. மதுரை போஸ்டர்னாலே பிரமாண்டம்தான்.. அதில் வரும் வாசகங்கள்தான் ஹைலைட்டே.. அப்படி ஒரு அலப்பறையான போஸ்டரை இப்போது விஜய் ரசிகர்கள் ஒட்டி மதுரைக்காரர்களையே ஜெர்க் அடிக்க வைத்துள்ளனர்.


நடிகர் விஜய்யின் அரசியல் பிரவேசம் குறித்த போஸ்டர்கள் அவ்வப்போது மதுரையில் ஒட்டப்படுவது வழக்கம். இத்தகைய போஸ்டர்களால் பல சர்ச்சைகளும் எழுத்த வண்ணம் இருந்தாலும், விஜய்யின் ரசிகர்கள் அதையொல்லம் பொருட்படுத்துவதாக இல்லை. அவ்வப்போது எதையாவது கிளப்பிக் கொண்டேதான் இருப்பார்கள். 




எப்படியாவது விஜய்யை அரசியலில் இறக்கி விட்டே ஆவோம் என்று அடிக்கடி போஸ்டர்களை ஒட்டிய வண்ணமே இருக்கின்றனர். 


சில மாதங்களாகவே விஜய் தனது அரசியல் நடவடிக்கைகளை வேகப்படுத்த ஆரம்பித்துள்ளார். விஜய் மக்கள் இயக்கத்தில் பல்வேறு அணிகளை உருவாக்கி வருகிறார். மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குதல், அவர்களை கவுரவப்படுத்துதல் போன்ற செயல்களை செய்தும் வருவதும், ரசிகர்களை மேலும் உச்சாகமடைய வைத்துள்ளன எனலாம். 


இப்படி இருக்கும் நிலையில், இன்று லியோ டிரைலர் வெளியாகவுள்ளது. டிரைலர் வெளியீட்டில் எதாவது அரசியல் குறித்த பஞ்ச் இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டுள்ளனர். இந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில்தான் மதுரையில் ஒரு வித்தியாசமான போஸ்டரை ஒட்டி அதகளப்படுத்தியுள்ளனர் விஜய் ரசிகர்கள்.


அதாவது.. எம்ஜிஆர், காமராஜர் நடுவில் விஜய் நிற்பது போன்று இந்த போஸ்டரில் படம் உள்ளது.  அதில், "தம்பி பொறுத்தது போதும் வா தமிழ்நாட்டின் தலைமைப் பொறுப்பை ஏற்க நாங்கள் அமர்ந்திருந்த அரியாசனம் உனக்காக காத்திருக்கிறது. நாளைய முதல்வர் நீயே" என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது.


இந்த போஸ்டர் மதுரையில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.  அதிமுகவின் அடையாளமாக எம்ஜிஆர் இருக்கிறார்.. காங்கிரஸின் அடையாளம் காமராஜர்.. இந்த இருவரையும் சேர்த்து போஸ்டர் அடித்துள்ளதன் மூலம் விஜய் ரசிகர்கள் இந்த சமூகத்திற்கு எதையோ சொல்ல வருகிறார்கள் என்று தெரிகிறது.


இன்னும் என்னெல்லாம் வரப் போகுதோ!