எஸ்ஏசியுடன் ஒன்று சேர்ந்த விஜய், புஸ்ஸி ஆனந்த்... குஷியில் ரசிகர்கள்!

Su.tha Arivalagan
Sep 16, 2023,12:53 PM IST
சென்னை: தந்தை எஸ்.ஏ.சந்திரசேகருடன் நடிகர் விஜய் கருத்து வேறுபாடு கொண்டிருந்ததாக கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது அவரைச் சந்தித்து விஜய் பேசியிருப்பதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

அதேபோல புஸ்ஸி ஆனந்த் மீது எஸ்.ஏ.சி அதிருப்தியுடன் இருந்து வந்தார் என்று தகவல்கள் வெளியான நிலையில், அவரும் கூட எஸ்.ஏ.சியை சந்தித்து புகைப்படமும் எடுத்துக் கொண்டு மகிழ்ச்சியுடன் வெளியிட்டுள்ளார். இதெல்லாம் விஜய் ரசிகர்களை மேலும் உற்சாகமடைய வைத்துள்ளது.



நடிகர் விஜய்யை நாளைய தீர்ப்பு மூலம் ஹீரோவாக்கி அழகு பார்த்தவர் அவரது தந்தை எஸ்.ஏ.சி.  தொடர்ந்து சில படங்களில் அவரை ஹீரோவாகப் போட்டு  விதம் விதமாக அவருக்கு எக்ஸ்போசரை உருவாக்கியவரும் அவரே. விஜய்க்கு நல்ல வெளிச்சம் கிடைக்கும் வரை விடாமல் மோல்ட் செய்து அவருக்கென்று ஒரு ஸ்பேஸ் கிடைத்ததும்தான் எஸ்.ஏ.சி, பிற இயக்குநர்கள் வசம் விஜய்யை ஒப்படைத்தார். 

விஜய்யும் தனது தனித் திறமையாலும், அயராத உழைப்பாலும் படு வேகமாக முன்னணி இடத்தைப் பிடித்து அனைவரையும் பிரமிக்க வைத்தார். ஹீரோ என்றால் கலராக இருக்க வேண்டும். ஆஜானுபாகுவாக இருக்க வேண்டும்,  அழகாக இருக்க வேண்டும் என்ற அத்தனை இலக்கணத்தையும் உடைத்துத் தகர்த்து, சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு நிகரான இடத்தைப் பிடித்து அசத்தியவர் விஜய். இன்று ரஜினிக்கே சவால் விடும் வகையில் அவரது வளர்ச்சி விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது.

இந்த நிலையில் சமீப காலமாக அவருக்கும், எஸ்ஏசிக்கும் இடையே சமூகமான உறவு இல்லை என்று கூறப்பட்டு வந்தது. மகன் மீது கொண்ட கோபத்தில் தனிக் கட்சி கூட ஆரம்பித்தார் எஸ்ஏசி. பின்னர் அதைக் கலைத்தார். அதேபோல விஜய் மக்கள் இயக்க தலைவர் புஸ்ஸி ஆனந்த்தையும் கூட எஸ்ஏசி விமர்சித்து வந்தார். பின்னர் அவர் அமைதியாகி விட்டார்.



இப்படிப்பட்ட நிலையில்தான் தனது தந்தையை வீடு தேடிச் சென்று சந்தித்து பேசியுள்ளார் விஜய். எஸ்ஏசிக்கு உடல் நல பாதிப்பு ஏற்பட்டு அறுவைச் சிகிச்சை நடந்துள்ளது. இதையடுத்து அவரை நேரில் சென்று நலம் விசாரித்துள்ளார் விஜய். மேலும் மனம் விட்டும் பேசியுள்ளார். இதுகுறித்து மகிழ்ச்சியுடன் எஸ்ஏசி புகைப்படம் வெளியிட்டிருந்தார். அதேபோல புஸ்ஸி ஆனந்த்தும் கூட எஸ்ஏசி யை நேரில் சந்தித்துப் பேசியுள்ளார். அவரும் மன மகிழ்ச்சியுடன் புகைப்படம் வெளியிட்டுள்ளார்.

விஜய்யும், புஸ்ஸி ஆனந்தும் எஸ்ஏசி யை சந்தித்து மகிழ்ச்சியுடன் பேசியது குறித்து விஜய் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். எல்லாம் சரியாய்ருச்சு.. இனி நமக்கு வெற்றிதான் என்று அவர்கள் குஷியுடன் கூறி வருகிறார்கள்.