விஜய்யின் அடுத்த அதிரடி .. "பேரு பிரபலமாகணும் பிகிலு".. கட்சி நிர்வாகிகளுக்கு உத்தரவு!

Meenakshi
Feb 09, 2024,05:57 PM IST

சென்னை: பேரு வச்சாச்சு.. சரி, அடுத்து..  என்ற கேள்விதானே வரும்.. அந்த வகையில் கட்சியை ஆரம்பித்து பேரையும் வைத்து விட்ட விஜய், அடுத்து அந்தக் கட்சி பெயரை மக்கள் மத்தியில் பிரபலமாக்கும் வேலைகளில் தீவிரம் காட்டுமாறு தனது கட்சி நிர்வாகிகளைக் கேட்டுக் கொண்டுள்ளாராம்.


விஜய் கடந்த 2ம் தேதி தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கி அதன் தலைவரானார். அதனை தொடர்ந்து கட்சி குறித்த அறிக்கை ஒன்றையும் வெளியிட்டார். அதில் என்னை பொறுத்தவரையில் அரசியல் மற்றொரு தொழில் அல்ல அது ஒரு புனிதமான மக்கள் பணி. அரசியலின் உயரம் மட்டுமல்ல அதன் நீள அகலத்தையும் அறிந்து கொள்ள தெரிந்து கொள்ள எம் முன்னோர் பலரிடமிருந்து பாடங்களை படித்து நீண்ட காலமாக என்னை அதற்கு தயார்படுத்தி மனதளவில் பக்குவப்படுத்திக் கொண்டு வருகிறேன்.


அரசியல் எனக்கு பொழுதுபோக்கு அல்ல அது என் ஆழமான வேட்கை. அதில் என்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ளவே விரும்புகிறேன்.வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் தாம் போட்டியிடுவது இல்லை என்றும் எந்த கட்சிக்கும்  ஆதரவு இல்லை என்றும் தெரிவித்திருந்தார்.




அரசியல் கட்சி தலைவர்களும், சினிமா பிரபலங்களும் பலர் இவருக்கு வாழ்த்து தெரிவித்து வந்தனர். விஜய் அரசியலுக்கு வந்ததை வரவேற்கும் வகையில் தமிழகம் முழுவதும் உள்ள ரசிகர்கள், தொண்டர்கள், என அனைவரும் பட்டாசு வெடித்து, இனிப்புகளை வழங்கி கொண்டாடி மகிழ்ந்தனர். இப்படி ஒரு புறம் இருக்க  மறுபக்கம் பலர் விமர்சித்தும் பேசி வருகின்றனர்.


அவர்களிடம் "உசுப்பேத்துபவர்களிடம் உம்முன்னும்.. கடுப்பேத்துகிறவர்களிடம் கம்முன்னு இருந்தா.. கட்சி ஜம்முன்னு வளரும்" என்ற பாலிசியை கட்சிக்காரர்கள் கடைப்பிடித்து அமைதி காத்து வருகின்றனர்.


கட்சி நிர்வாகிகளுக்கு தற்போது முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார் விஜய். அதில், விஜய் மக்கள் இயக்க மாவட்டத் தலைவர்களே, கட்சியின் மாவட்ட செயலாளராக செயல்படுவார்களாம். தமிழகம் முழுவதும் விஜய் மக்கள் இயக்கத்தின் மாவட்ட தலைவர்களாக உள்ளவர்கள் இனி தமிழக வெற்றி கழகத்தின் மாவட்ட செயலாளர் ஆக இருப்பார்கள் என விஜய் தெரிவித்துள்ளார். 


மக்களவைத் தேர்தலுக்குப் பின் தீவிர அரசியல் பயணத்தை தொடங்க திட்டமிட்டுள்ள அவர் கட்சி நிர்வாகிகளுடன் வீடியோ காலில் பேசினார். அதில் எந்த பாகுபாடும் இல்லாமல் மக்கள் பணியாற்றவும் கட்சியின் பெயரை பிரபலப்படுத்தும் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனால் கட்சி நிர்வாகிகள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளார்களாம். 


சட்டசபைத் தேர்தல்தான் நம்ம டார்கெட் என்று கூறி விட்ட விஜய், தெளிவான முறையில் தனது திட்டங்களை வகுத்து நிதானமாக அடியெடுத்து வைப்பதால் அவரது போக்கு எப்படி இருக்கும், என்ன மாதிரியான தாக்கத்தை அவர் ஏற்படுத்துவார் என்ற எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது. 


நம்ம "பிகில் அண்ணன்" கட்சி வெற்றி பெற்று 2026ல் கோப்பையை கைபற்றுமா? என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்...!