விஜயதசமி.. புதிய மாணவர் சேர்க்கை.. 'அ'கரம்.. எழுத வைத்த  ஆசிரியர்கள்!

Su.tha Arivalagan
Oct 24, 2023,11:43 AM IST

தேவகோட்டை : கல்விக்கு உரிய சரஸ்வதி தேவியும், செல்வத்திற்கு உரிய லட்சுமி தேவியும் ,வீரத்துக்குரிய பார்வதி தேவியையும், போற்றி வணங்கும் பண்டிகையாக நாடு முழுவதும் மிகவும் கோலாகலமாக கொண்டாடும் பண்டிகை தான் நவராத்திரி. அதன் நிறைவு நாளை தான் விஜய் தசமியாக கொண்டாடுகிறோம். 


புரட்டாசி மாதத்தின் அமாவாசை கழித்து வரும் பத்தாம் நாள் கொண்டாடப்படும் விழா விஜயதசமி ஆகும். விஜய் என்பது வெற்றி தசமி என்பது பத்தாவது நாள். இதனால்தான் விஜயதசமி என பெயர் பெற்றது.




வெற்றி தரும் விஜயதசமி நன்னாளில் கல்வி ,கலை என எதனை தொடங்கினாலும் வெற்றியாக முடியும் என்பது இந்துக்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. பண்டைய காலம் முதல் இன்று வரை விஜயதசமி நாளில் ஆரம்பக் கல்வியை கொடுப்பதே இதன் சிறப்பாகும். இது வித்தியாரம்பம் எனவும் அழைக்கப்படுகிறது.


உலகப் புகழ்பெற்ற மைசூர் தசரா பண்டிகையையும் இந்நாளில் தான் கொண்டாடப்படுகிறது. விஜயதசமி நாளில் குழந்தைகளுக்கான ஆரம்பக் கல்வியான இசை ,ஓவியம், நடனம், எழுத்து ,பிற மொழி பேசுதல் மற்றும் ஒரு தொழிலை தொடங்குதல் போன்றவற்றை செயல்படுத்தினால் சரஸ்வதி தேவியின் பரிபூரண அருள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.


தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் விஜயதசமி தினத்தன்று பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை முதன்முதலாக பள்ளியில் சேர்ப்பது தொன்றுதொட்டு நடைமுறையில் இருந்து வருகின்ற பழக்கமாகும் .




தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியிலும் வித்தியாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது. தலைமை ஆசிரியர்  லெ. சொக்கலிங்கம் தலைமையில்  விஜயதசமி அன்று புதிய மாணவர்கள் சேர்க்கையான, கல்வி கண் திறப்பு நிகழ்வு நடைபெற்றது. 


ஆசிரியர்கள் முத்துலட்சுமி, ஸ்ரீதர், முத்தமினாள் ஆகியோர் புதிதாய் சேர்ந்த மாணவர்களுக்கு மாலை அணிவித்து நெல்மணிகளில் 'அ'கரம் எழுத வைத்து அ ஆ என சொல்ல வைத்தனர். பின்னர் புதிய மாணவர்களுக்கு திருக்குறள் வாசிப்பு பயிற்சியும் அளிக்கப்பட்டது. இதன் காரணமாக புதிதாய் பள்ளியில் சேர்ந்த மாணவர்கள் மகிழ்ச்சியுடன் சென்றனர்.