குடியரசுத் தலைவருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட முடியுமா..? குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் கேள்வி..!
டெல்லி: மசோதா தொடர்பான வழக்கில் குடியரசு தலைவருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், துணை குடியரசுத் தலைவர் ஜக்தீப் குடியரசுத் தலைவரை உச்ச நீதிமன்றம் உத்தரவிட முடியுமா என கேள்வி எழுப்பி உள்ளார்.
தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றிய 22 மசோதாகளுக்கு ஆளுநர் ஆர்.என் ரவி எந்த முடிவையும் எடுக்காமல் கிடப்பில் போட்டு வைத்திருந்தார்.
கடந்த 2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம் தொடர்பாக பத்து மசோதாக்களை ஆளுநர் திருப்பி அனுப்பினார். இதே மசோதாவை மீண்டும் நிறைவேற்றி ஆளுநருக்கு தமிழ்நாடு அரசு அனுப்பி வைத்தது.
ஆனால், மசோதாக்களின் மீது ஆளுநர் எந்த பதிலையும் அளிக்கவில்லை. இதையடுத்து, ஆளுநருக்கு எதிராக தமிழ்நாடு அரசு இரண்டு ரிட் மனுக்களை தாக்கல் செய்திருந்தது.
இந்த மனுக்கள் மீதான விசாரணை கடந்த ஏப்ரல் 8ஆம் தேதி உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.டி.பர்திவாலா, ஆர்.மகாதேவன் அமர்வில் தீர்ப்பு வழங்கப்பட்டது.
அதன்படி,
ஆளுநர் குடியரசு தலைவருக்கு அனுப்பிய மசோதாக்கள் செல்லாது. நிறைவேற்றிய மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் நிலுவையில் வைக்க ஆளுநருக்கு என்று தனி அதிகாரங்கள் எதுவும் கிடையாது.
மூன்று மாதங்களில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குடியரசுத் தலைவருக்கு காலக்கெடு நிர்ணயித்து உத்தரவிட்டது.
இந்த நிலையில் டெல்லியில் மாநிலங்களவை தொடர்பான நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பேசிய குடியரசு துணை தலைவர் ஜக்தீப் தன்கர், மசோதாக்கள் மீது முடிவெடுக்க குடியரசு தலைவருக்கு மூன்று மாதம் காலகெடு வழங்கிய உச்சநீதிமன்ற தீர்ப்பை விமர்சித்து பேசியுள்ளார்.
மேலும், குடியரசு தலைவருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட முடியுமா..? அரசியலமைப்பின் 142 ஆவது பிரிவின் கீழ் ஜனநாயக சக்திகளுக்கு எதிரான அணு ஏவுகணையை போல் உச்ச நீதிமன்றம் மாறியுள்ளது. உச்ச நீதிமன்றம் குடியரசுத் தலைவரை வழி வழிநடத்தக் கூடிய முறையை அனுமதிக்க முடியாது எனவும் குற்றம் சாட்டியுள்ளார் .