வேட்டையன் படம் என்கவுண்டரை ஆதரிக்கிறதா?.. சென்சார் போர்டுக்கு நோட்டீஸ்.. ரிலீஸுக்கு தடை இல்லை!

Manjula Devi
Oct 03, 2024,02:52 PM IST

சென்னை:   வேட்டையன் திரைப்படம் வரும் அக்டோபர் 10ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில்,  இப்படத்திற்கு தடை விதிக்க கோரிய வழக்கில், இடைக்கால தடை விதிக்க மதுரை உயர்நீதிமன்றக் கிளை மறுத்து விட்டது. அதேசமயம், இதுதொடர்பாக விளக்கம் அளிக்குமாறு சென்சார் போர்டு, படத் தயாரிப்பு நிறுவனம் ஆகியவற்றுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


இயக்குநர் த.செ ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் வேட்டையன். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. இதில் ரஜினியுடன் அமிதாப் பச்சன், பகத் பாசில், துஷாரா விஜயன், மஞ்சு வாரியர், ரித்திகா சிங் உள்ளிட்ட பலர்  நடித்துள்ளனர். அனிருத்  இசையமைத்துள்ளார்.




இப்படம் வருகின்ற அக்டோபர் 10ஆம் தேதி தமிழ்,தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் , உள்ளிட்ட  மொழிகளிலும் வெளியாக உள்ளது.  இதற்காக ரசிகர்கள் எதிர்பார்த்து காத்து வருகின்றனர். இதற்கிடையே சமீபத்தில் இப்படத்தின் பாடல்கள் அடுத்தடுத்து வெளியானது. இது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று ஹிட் கொடுத்தது. இதனைத் தொடர்ந்து நேற்று வேட்டையன் படத்தின் டிரைலர் வெளியாகி, இப்படம் ட்ரைலருக்கும் மிகப்பெரிய வரவேற்பு எழுந்துள்ளது.


வேட்டையன் படத்தின் டிரைலர் நேற்று வெளியான நிலையில், இப்படத்தை வெளியிட இடைக்கால தடை விதிக்க வேண்டும் என மதுரையை சேர்ந்த பழனிவேல் என்பவர்  வழக்கு தொடர்ந்துள்ளார். தனது மனுவில், வேட்டையன் பட டிரைலரில் என்கவுண்டர் தொடர்பான  வசனங்களும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. என்கவுண்டர்களை ஆதரிப்பது போல இது உள்ளது. அதனால் சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ள இந்த காட்சிகளை தடை செய்ய வேண்டும் அல்லது மியூட் செய்ய வேண்டும் என அதில் தெரிக்கப்பட்டுள்ளது.


இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தபோது, வழக்கை விசாரித்த கோர்ட்,  இடைக்கால தடை விதிக்க மறுத்து விட்டது. அதேசமயம், மத்திய சென்சார் நிறுவனம், தமிழக அரசு மற்றும்  இப்பட நிறுவனம் விளக்கம் அளிக்குமாறு கூறி நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, வழக்கை ஒத்தி வைத்துள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்