Ratan Tata: முழு அரசு மரியாதையுடன் ரத்தன் டாடா உடல் தகனம்.. ஆயிரக்கணக்கான மக்கள் அஞ்சலி

Su.tha Arivalagan
Oct 10, 2024,06:01 PM IST

மும்பை: மறைந்த முதுபெரும் தொழிலதிபர் ரத்தன் டாடாவின் உடல் இன்று மாலை ஆயிரக்கணக்கான மக்களின் இறுதி அஞ்சலிக்குப் பிறகு முழு அரசு மரியாதைகளுடன் தகனம் செய்யப்பட்டது.


86 வயதான ரத்தன் டாடா, இந்திய தொழில்துறையின் முன்னோடி ஆவார். டாடாட குழுமத்தின் தலைவராக இருந்து வந்தார். சில ஆண்டுகளாகவே வயோதிகம் தொடர்பான உடல் நல பாதிப்புகள் அவருக்கு இருந்து வந்தது. இருப்பினும் அதைப் பொருட்படுத்தாமல் பல்வேறு செயல்பாடுகளில் அவர் ஈடுபட்டிருந்தார். ஆக்டிவான வேலைகளில் மட்டும் ஈடுபடாமல் ஒதுங்கி இருந்த ரத்தன் டாடாவுக்கு சில நாட்களுக்கு முன்பு உடல் நல பாதிப்பு ஏற்பட்டது. இதற்காக அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.




ஆனால் தான் நலமாக இருப்பதாக தெரிவித்திருந்த ரத்தன் டாடா, தன் மீது அக்கறை காட்டும் அனைவருக்கும் நன்று எக்ஸ் தளத்தில் பதிவு போட்டிருந்தார். இந்த நிலையில் நேற்று மீண்டும் உடல் நல பாதிப்பு ஏற்படவே மும்பை ப்ரீச்கண்டி மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டார் ரத்தன் டாடா. ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் ரத்தன் டாடா இயற்கை எய்தினார். இதுகுறித்த அறிவிப்பை டாடா குழுமத் தலைவர் என். சந்திரசேகரன் அறிக்கை மூலம் வெளியிட்டார்.


பத்மவிபூஷண் உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ள ரத்தன் டாடாவின் உடல் இன்று காலை 10. 30 மணி முதல் மாலை 4 மணி வரை பொதுமக்கள் அஞ்சலிக்காக டாடாவின் உடல் வைக்கப்பட்டது.  தெற்கு மும்பையில் உள்ள தேசிய பெர்பார்மிங் ஆர்ட்ஸ் மையத்தில் ரத்தன் டாடாவின் உடல் வைக்கப்பட்டது. உடலுக்கு தொழிலதிபர்கள், அரசியல், விளையாட்டு உள்ளிட்ட பல்துறைப் பிரமுகர்கள், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் அஞ்சலி செலுத்தினர்.




இறுதி அஞ்சலிக்குப் பிறகு ஒர்லி பகுதியில் உள்ள பார்சி சமுதாய மயானத்திற்கு ரத்தன் டாடாவின் உடல் கொண்டு வரப்பட்டது. அங்கு முழு அரசு மரியாதைகளுடன் இறுதிச் சடங்குகள் நடைபெற்றன. இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் அமித்ஷா,  மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


ரத்தன் டாடாவின் மறைவுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள், பல்துறைப் பிரமுகர்கள், தொழிலதிபர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்