தாண்டவமாடும் புயல்.. மினி வங்கக் கடலானது சென்னை..  இன்று மாலை வரை..  கன மழை தொடரும்!

Su.tha Arivalagan
Dec 04, 2023,10:37 AM IST
- மஞ்சுளா தேவி

சென்னை: மிச்சாங் புயல் சென்னைக்கு அருகே வந்திருப்பதால், காற்றின் வேகம் சற்று அதிகமாக இருக்கும் காரணத்தால், இன்று மாலை வரை மிக கன மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

தமிழ்நாட்டில் 23 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் அறிவித்துள்ளது.

வங்கக் கடலில் ஏற்பட்ட புயலின் காரணமாக சென்னை மற்றும் வடகடலோர மாவட்டங்களில் கன மழை கொட்டி தீர்த்து வருகிறது. குறிப்பாக சென்னையில் நேற்று இரவு முதல் தற்போது வரை மழை தொடர்ந்து நீடித்து வருகிறது. இதனால் சாலைகளில் மழைநீர்  பெருக்கெடுத்து ஓடுவதால் ஊரே மினி வங்கக் கடல் போல்  காட்சியளிக்கிறது. 

மிச்சாங் புயல் சென்னைக்கு 150 கிலோமீட்டர் தொலைவில் கிழக்குத் தென்கிழக்கில் மையம் கொண்டுள்ளது. இது நெல்லூர் -மசூலிப்பட்டினம் இடையே நாளை கரையைக் கடப்பதாலும், காற்றின் வேகம்  சற்று அதிகமாக இருப்பதாலும் சென்னையில் இன்று மாலை  வரை மழை  நீடிக்கும். ஆந்திராவின் நெல்லூர் பகுதிகளில் தற்போது பலத்த காற்றுடன் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. புயல் கரையைக் கடக்கும் போது கடுமையான வானிலை நிலவும் என்பதால் 5 துறைமுகங்களில் 5 ஆம் எண் புயல் கூண்டு  ஏற்றப்பட்டுள்ளது.



சென்னை ,திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ஆகிய மாவட்டங்களில் இன்று இடியுடன் கன மழையும், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, விழுப்புரம், மயிலாடுதுறை, தஞ்சை, அரியலூர் ,பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், தர்மபுரி,கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், திருச்சி ,தஞ்சை, திருவாரூர், ஆகிய 23 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழையை எதிர்பார்க்கலாம்.

டபுள் செஞ்சுரியைத் தாண்டி மழை ஆட்டம்

சென்னையில் அதிகபட்சமாக பெருங்குடியில் 29 சென்டிமீட்டர் (290 மில்லி மீட்டர்) மழை பதிவாகியுள்ளது.  மீனம்பாக்கம் மற்றும் ஆலந்தூரில் தலா 25 சென்டிமீட்டர் மழையும், மாமல்லபுரத்தில் 20 செமீ மழையும் பதிவாகியுள்ளது.

வளசரவாக்கத்தில் 19 செமீ மழையும், அண்ணா நகரில் 18.3 செமீ மழையும், கோடம்பாக்கம்  18 .2 செமீ,மழையும் அடையாறு மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் 17.4 செமீ மழையும் மற்றும் நுங்கம்பாக்கத்தில் 15 செமீ மழையும் பதிவாகியுள்ளது.

2015ம் ஆண்டில்தான் இப்படி மழை பேயாட்டம் போட்டது. அதன் பிறகு இப்போதுதான் வெளுத்து வாங்கி வருகிறது. ஒரே நாளில் பல இடங்களில் 200 மில்லி மீட்டர் அளவுக்கு மழை கொட்டித் தீர்த்துள்ளதால் சென்னை நகரமே மிதக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.