ஜூன் 22, 23, 24.. கோவை, நீலகிரியை புரட்டிப் போடப் போகும்.. மிக கனமழை.. கவனம் மக்களே!

Manjula Devi
Jun 20, 2024,08:28 PM IST

சென்னை:  தமிழகத்தில் ஜூன் 22, 23,24 ஆகிய மூன்று நாட்கள் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய  வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


தமிழகத்தில் கடந்த ஒரு வார காலமாக பரவலாக கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.குறிப்பாக சென்னை உள்ளிட்ட வடகடலோர மாவட்டங்களில் கன மழை வெளுத்து வாங்கியது. இதனால் தற்போது வெப்பம் தணிந்து குளுமை நிலவி வருகிறது. ஜூன் மாதத்தில் இயல்பை விட மழையளவு பதினாறு சதவீதம் அதிகமாக பெய்துள்ளது.


இந்த நிலையில் பருவநிலை மாற்றம் மற்றும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கன்னியாகுமரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தற்போது கனமழை விட்டு விட்டு  பெய்து வருகிறது. இதனால் விவேகானந்தர்  பாறைக்குச் செல்லும் படகு சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் படகுமூலம் செல்லவும் சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தமிழக பூம்புகார் கப்பல் நிர்வாகம் அறிவித்துள்ளது.




இன்று கனமழை:


நீலகிரி, திருப்பூர், கோவை, திண்டுக்கல், தேனி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி, ஆகிய 8 மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.


மிக கனமழை:


ஜூன் 22, 23, 24,ஆகிய மூன்று நாட்கள் கோவை மற்றும் நீலகிரியில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.


கனமழை:


திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி, ஆகிய ஆறு மாவட்டங்களில் ஜூன் 22, 23,24, ஆகிய மூன்று நாட்கள் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.


கேரளாவில் தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்ததை தொடர்ந்து கனமழை கேரளாவையே புரட்டிப் போட்டுள்ளது. இதன் காரணமாக பல்வேறு இடங்களில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கேரள அரசின் வேண்டுகோளின் படி அரக்கோணத்தின் அருகே உள்ள தக்கோலத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் ஏழு பேர் கொண்ட  குழுக்களாக 210 பேர் கேரளா விரைந்துள்ளனர்.