வளைகாப்பு நடத்துவது எப்படி? வேலூர் காங்கேயநல்லூர் அரசுப் பள்ளி மாணவிகளின் ரீல்ஸ்..டீச்சர் சஸ்பெண்ட்!

Manjula Devi
Sep 20, 2024,02:36 PM IST

வேலூர்:   அரசு பள்ளிகளில் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், வேலூர் காங்கேயநல்லூர் அரசு பள்ளி மாணவிகள் சக மாணவிக்கு வளைகாப்பு நடத்துவது போன்ற வீடியோவை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர். இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட வகுப்பு ஆசிரியை சாமுண்டீஸ்வரி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.


சமீப காலமாக மாணவ மாணவிகள் உட்பட பலரும் ரீல்ஸ் செய்யும் வீடியோக்களை வெளியிடுவதில் பெரும் ஆர்வம் காட்டுகின்றனர். வயதுக்கு மீறிய வகையில், அவர்களின் நிலைக்கு மீறிய வகையில் பல வீடியோக்கள் அமைவதால் அது முகம் சுளிக்க வைக்கிறது. மேலும் ரீல்ஸ் என்ற பெயரில் பலர் வரம்பு மீறுவதும் நடந்து வருகிறது.




ரீல்ஸ் எடுப்பது பொழுது போக்காக  மாறியுள்ளது. ஆனால் ரீல்களை எப்படி எடுக்க வேண்டும் என்ற வரைமுறையே இல்லாமல் மாணவ, மாணவியர், இளைஞர்கள், இளம் பெண்கள் செய்யும் செயல்கள் அனைவருக்கும் சங்கடங்களை ஏற்படுத்தி வருகிறது. அந்த வரிசையில் வேலூர் மாவட்டம் காங்கேயநல்லூர் கிருபானந்தவாரியார் அரசு பெண்கள் மேல்நிலை  பள்ளி ஒன்றில் மாணவிகள் சக மாணவி ஒருவருக்கு வளைகாப்பு நடத்தி அதை ரீல்ஸ் எடுத்துள்ளனர்.


இந்த வளைகாப்பை வகுப்பறையில் நடத்தியதுதான் சர்ச்சையாகியுள்ளது. வளைகாப்புக்கு தேவையான பழம் பூ சந்தனம்  முதலியவை வைத்து  செய்யும் சடங்குகளை புகைப்படம் எடுத்துள்ளனர். இந்த வளைகாப்பு நிகழ்ச்சி எங்கு எப்போது நடைபெறும், நாள் தேதி போன்றவை இடம்பெறும் வகையில் ஒரு பத்திரிக்கையும் தயார் செய்து பதிவிட்டு உள்ளனர். மாணவிகள் அழைப்பிதழ் மற்றும் வளைகாப்பு நிகழ்ச்சியை வீடியோவாக ரீல்ஸ் எடுத்துள்ளனர். இந்த ரீல்ஸ் வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


இதையடுத்து சம்பந்தப்பட்ட வகுப்பு ஆசிரியை சாமுண்டீஸ்வரி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். தலைமை ஆசிரியை பிரேமாவிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. மதிய உணவு இடைவேளையின்போது இனிமேல் மாணவிகளுடன், ஆசிரியைகளும் இணைந்து சாப்பிடுமாறு பள்ளிக்கு முதன்மைக் கல்வி அதிகாரி அறிவுறுத்தியுள்ளார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்