Rowdy MLA Raja: வெறித்தனமான கொலைகள்.. வேட்டையாடிய ரவுடியை.. சிதைத்த வேலூர் இளைஞர்கள்!

Su.tha Arivalagan
Jul 03, 2024,11:45 AM IST

வேலூர்: வேலூர் மாவட்டத்தை நேற்று பெரும் பரபரப்பில் ஆழ்த்தி விட்டது ஒரு கொலை.. அதுதான் ராஜா கொலை.. வெறும் ராஜா இல்லைங்க, எம்எல்ஏ ராஜா என்றால்தான் இந்தப் பக்கத்தில் நன்றாக தெரியும். எம்எல்ஏ என்றால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதி இல்லை.. தனக்குத் தானே இந்த ராஜா வைத்துக் கொண்ட அடைமொழிதான் இது.


வேலூர் மாவட்டம் அரியூரில் மிகக் கொடூரமான ரவுடியாக வலம் வந்தவர்தான் இந்த எம்எல்ஏ ராஜா. ரவுடிகளுக்கே இவரைப்பார்த்தால் பயம் வருமாம். அந்த அளவுக்கு ஈவு இரக்கமே இல்லாமல் பல கொலைகளைச் செய்துள்ளார். சிறை வார்டன், பாஜகவைச் சேர்ந்த டாக்டர் அரவிந்த் ரெட்டி என்று இவரிடம் சிக்கி கொடூரமாக மரணத்தைச் சந்தித்தவர்கள் பலர்.




ஏகப்பட்ட வழக்குகளை சுமந்தபடி ஜாலியாக வலம் வந்து கொண்டிருந்தவர் ராஜா. கத்தியை எடுத்தவனுக்கு கத்தியால்தான் மரணம் என்று சொல்வார்கள். ராஜா கதையிலும் நேற்று அதுதான் நடந்துள்ளது. சமீப காலமாக சிலரை மிரட்டி வந்துள்ளார் ராஜா. இதனால் அவரால் மிரட்டப்பட்டவர்கள் அச்சத்தில் இருந்து வந்தனர். ஒருவரை சில நாட்கள் பயமுறுத்தலாம், பல நாட்கள் அச்சுறுத்தலாம்.. ஆனால் சாது மிரண்டால் காடு கொள்ளாது இல்லையா.. அதுபோல ராஜாவால் மிரட்டப்பட்டு வந்த இளைஞர்களுக்கு தைரியம் வந்தது. 


ராஜா என்ன நம்மை தீர்த்துக் கட்டுவது, நாமே அவரை போட்டுத் தள்ளி விடுவோம் என்ற முடிவுக்கு அவர்கள் வந்தனர். இதையடுத்து தெளிவாக ஸ்கெட்ச் போட்டு நேற்று இரவு டூவீலரில் அரியூர் பகுதியில் வந்து கொண்டிருந்த அவரை சுற்றி வளைத்தனர் அந்தக் கும்பல். அவர்களிடம் வசமாக சிக்கிக் கொண்ட ராஜா தப்பிக்க முயன்றுள்ளார். ஆனால் இளைஞர்கள் விடவில்லை. சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டினர். இதில் அவரது முகத்தில் கொஞ்சம் கூட அடையாளமே தெரியாத  அளவுக்கு வெறித்தனமாக வெட்டித் தள்ளியுள்ளனர். எந்த அளவுக்கு கோபம் இருந்திருந்தால் இப்படி கொடூரமாக வெட்டித் தள்ளியிருப்பார்கள் என்பதை உணர முடிகிறது.




வேலூர் மக்களிடையே நேற்று இரவு பெரும் பரபரப்பையும் அச்சுறுத்தலையும் ஏற்படுத்தி விட்டது இந்த கொடூரக் கொலை. சம்பவம் நடந்த சில மணி நேரங்களிலேயே இந்தக் கொலையைச் செய்ததாக கருதப்படும் நான்கு பேரை போலீஸார் வளைத்துப் பிடித்து விட்டனர்.