1 லட்சம் விதைப் பந்துகள்.. வேலூரை அசத்தும் பசுமைத் தமிழன்!

Aadmika
Aug 13, 2023,09:54 AM IST
வேலூர்: வேலூரைச் சேர்ந்த தினேஷ் சரவணன் மற்றும் அவரது குழுவினர்  வருடா வருடம் ஒரு சூப்பரான வேலையைச் செய்து கொண்டுள்ளனர். இந்த வருடமும் அதற்கான வேலைகளைத் தொடங்கியுள்ளனர்.

பசுமையான இந்த பூமியை எந்த அளவுக்கு பொசுக்கி நசுக்க முடியுமோ அந்த அளவுக்கு செய்து விட்டார்கள் மனிதர்கள். உலகம் உருவானபோது அது எப்படி இருந்ததோ அதற்கு நேர் மாறாக இன்று புகை மண்டலத்திலும், மாசுக்களிலும், வறட்சியிலும் சிக்கித் தவித்து அழிந்து கொண்டுள்ளது.



குடித்த சுத்தமான தண்ணீர் இல்லை, சுவாசிக்க நல்ல காற்று இல்லை, நிம்மதியாக இருக்க முடியாத அளவுக்கு நமது பூமியை நாம் பாழ் செய்து வருகிறோம். எங்கெங்கும் சுற்றுப்புற சீர்கேடுகள் மலிந்து விட்டன. காற்று மாசு ஒலி மாசு என எல்லா மாசுக்களையும் ஏற்படுத்தி விட்டோம். ஓஸோன் மண்டலம் மேலும் மேலும் பலவீனமடைந்து உடைந்து கொண்டுள்ளது.

இதன் காரணமாக வரலாறு காணாத வறட்சிகளை  ஒரு பக்கம் சந்திக்கும் பூமி, மறுபக்கம் மிகப் பெரிய பேரழிவு வெள்ளங்களையும் காணும் அவல நிலை உள்ளது. இப்போதும் கூட சுதாரிக்காவிட்டால் பூமியை நாம் நிச்சயம் விரைவிலேயே அழித்து விடுவோம் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எச்சரித்து வருகின்றனர். உலகம் முழுவதும் ஆங்காங்கே பலரும் தனித் தனியாக இதற்காக குரல் கொடுத்து தங்களால் முடிந்ததைச் செய்து வருகிறார்கள்.



அந்த வரிசையில்,  வேலூரைச் சேர்ந்த தினேஷ் சரணவன் என்பவர் ஆண்டுதோறும் விதைப் பந்துகளை தயாரித்து அதை மலைப் பகுதிகளில் வன வளத்தைப் பெருக்க முயன்று வருகிறார். இந்த வருடமும் 1 லட்சம் விதைப் பந்துகளை இவரது டீம் உருவாக்கவுள்ளது.  காட்டுவாகை, சரக்கொன்றை, ஆலம், அரசம் போன்ற 9 வகையான மர விதைகள் பந்துகளாக உருட்டும் தொடக்க நிகழ்வை வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் அய்யா தொடங்கி வைத்தார். 

இந்த முறை வேலூர் வேலம்மாள் பள்ளியில் 300 மாணவ மாணவிகளுடன் இணைந்து 1 லட்சம் பந்துகளை தயாரிக்கிறோம் என்று தெரிவித்துள்ளார் தினேஷ் சரவணன்.

நிச்சயம் தினேஷ் சரவணன் டீமை பாராட்ட வேண்டும்.