சென்னை கோயம்பேட்டில்.. காய்கறி விலை ஜிலு ஜிலு குறைவு.. மக்கள் கல கல மகிழ்ச்சி..!

Manjula Devi
Jun 27, 2024,03:09 PM IST

சென்னை: சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில்  காய்கறிகளின் வரத்து அதிகரிப்பால் இன்று காய்கறிகளின் விலை சற்று குறைந்துள்ளது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். 


கடந்த ஒரு மாத காலமாக பரவலாக பல்வேறு இடங்களில் மழை பெய்து வருவதால் காய்கறி சந்தையில் காய்கறிகளின் வரத்து குறைவாக இருந்து வந்தது. இதனால் வீடுகளில் தினசரி உபயோகிக்கும் காய்களின் விலை கணிசமாக அதிகரித்து இருந்தது. குறிப்பாக சென்னை கோயம்பேடு சந்தையில் கடந்த ஒரு வாரம் ஆக காய்கறிகளின் விலை அதிகமாக இருந்தது. ஏனெனில் தினசரி கோயம்பேடு சந்தையில் 700 லாரிகளில் காய்கறிகள் இறக்குமதி செய்யப்படும். 




கடந்த ஒரு வாரமாக 300 லாரிகளில்தான் காய்கறிகள் இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. இதன் எதிரொலியாக பெரும்பாலான பகுதிகளில் காய்கறி விலை அதிகமாக விற்கப்பட்டு வந்தது. இதனால் தினசரி அத்தியாவசிய தேவைக்காக மக்கள் அதிகம் செலவழிக்கும் நிலைக்கு  தள்ளப்பட்டுள்ளனர்.


இந்த நிலையில் இன்று கோயம்பேடு சந்தையில் 500க்கும் அதிகமான லாரிகளில் காய்கறிகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. தற்போது காய்கறிகளின் வரத்து அதிகரித்துள்ளதால் காய்கறிகளின் விலை குறைந்துள்ளது.


கடந்த வாரம் கிலோ ரூபாய் 120  இருந்த அவரக்காய்  மற்றும் பீன்ஸ் விலை இன்று ஒரு கிலோ 90 ரூபாயாக குறைந்துள்ளது.  அதேபோல் தக்காளி, வெங்காயம், பீட்ரூட் , முள்ளங்கி, சௌசௌ, முட்டைக்கோஸ், போன்றவை கிலோ 50க்கும் குறைவாக விற்கப்பட்டு வருகிறது. விலை குறைந்திருப்பதால் மக்கள் மகிழ்ச்சியுடன் காய்கறிகளை வாங்கிச் செல்கின்றனர்.