விசிக துணை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா 6 மாதம் சஸ்பெண்ட்.. திருமாவளவன் அறிவிப்பு

Meenakshi
Dec 09, 2024,05:45 PM IST

சென்னை: விசிக துணை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா கட்சியில் இருந்து 6 மாத காலம் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக விசிக தலைவர் திருமாவளவன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.


கடந்த 6ம் தேதி சென்னையில் ஆதவ் அர்ஜூனாவின் வாய்ஸ் ஆப் காமன் அமைப்பு சார்பில் எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் என்ற தலைப்பிலான நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. அந்த விழாவில் தவெக தலைவர் விஜய் கலந்து கொண்டு புத்தகத்தை வெளியீட்டார். இந்த விழாவில் பேசிய ஆதவ் அர்ஜூனா தமிழகத்தில் உள்ள மன்னராட்சிக்கு முடிவு கட்ட வேண்டும் என்று பேசியிருந்தார்.


ஆதவ் அர்ஜூனா திமுகவினரை நேரடியாக தாக்கி பேசியது, அக்கட்சி தொண்டர்களையும், நிர்வாகிகளையும் கடும் கோபம் அடையச் செய்தது. அத்துடன் ஆதவ் அர்ஜூனா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வலுத்து வந்தது. இந்நிலையில், விசிக உயர்நிலைக்குழு கூடி ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று கட்சித் தலைவர் திருமாவளவனும் தெரிவித்து இருந்தார்.




தற்போது ஆதவ் அர்ஜூனா கட்சியிலிருந்து சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பாக விடுதலை சிறுத்தைக் கட்சி தலைவர் திருமாவளவன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறியுள்ளதாவது:


1. கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா அவர்கள் அண்மைக் காலமாக கட்சியின் நலன்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வருகிறார் என்பது தலைமை நிர்வாகத்தின் கவனத்திற்கு தெரிய வந்தது.


2. இது குறித்து கடந்த 7-12-2024 அன்று கட்சியின் பொதுச் செயலாளர்கள் உள்ளிட்ட முன்னணித் தோழர்களுடன் கலந்தாய்வு செய்யப்பட்டது.


3. கட்சித் தலைமையின் அறிவுறுத்தல்களையும் மீறி, தொடர்ச்சியாக அவர் எதிர்மறையாக செயல்பட்டு வருவது அத்தகைய செயல்பாடுகள், மேலோட்டமாக நோக்கினால், கட்சியின் நலன்கள் மற்றும் அதிகார வலிமைக்கானதாகத் தோன்றினாலும், அவை கட்சி மற்றும் தலைமையின் மீதான நன்மதிப்பையும் நம்பகத்தன்மையையும் கேள்விக்குள்ளாக்கும் வகையில் பொதுவெளியில் கடுமையான விமர்சனங்களை உருவாக்கி இருக்கிறது.


4. இத்தகைய போக்குகள், கட்சிப் பொறுப்பாளர்களிடையே நிலவும் கட்டுக்கோப்பை சீர்குலைக்கும் வகையில், கட்சிக்குள்ளேயே ஒரு எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன், கட்சியினருக்கு இது ஒரு தவறான முன்மாதிரியாக அமைந்து விடும் என்கிற சூழலை உருவாக்கியுள்ளது.


5. இத்தகைய சூழலைக் கருத்தில் கொண்டு, கட்சியின் நலன்களை முன்னிறுத்தி, கட்சி தலைவர் மற்றும் பொதுச் செயலாளர்கள் ஆகிய மூவர் உள்ளடக்கிய தலைமை நிர்வாக குழுவில், ஆதவ் அர்ஜுனா அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்வது என தீர்மானிக்கப்பட்டது.


6. அதன்படி, ஆதவ் அர்ஜுனா அவர்கள் கட்சியில் இருந்து ஆறுமாத காலத்திற்கு இடைநீக்கம் செய்யப்படுகிறார்  என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த அறிவிப்பு கட்சி வட்டாரத்தில் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த இடைநீக்கம் தொடருமா? அல்லது முழுமையாக ஆதவ் அர்ஜூனா நீக்கப்படுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்