வாழை.. புளியங்குளத்தில் முளைவிட்ட.. மாரியின் வேர்களில் மார்க்சியம்.. திருமாவளவன் புகழாரம்

Su.tha Arivalagan
Aug 25, 2024,12:46 PM IST

சென்னை: வாழை படம் குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் புகழாரம் சூட்டியுள்ளார்.


மாரி செல்வராஜின் வாழை படத்தை ரசிகர்கள் மட்டுமல்லாமல் திரையுலகினரும் கொண்டாடி வருகின்றனர். மணிரத்தினம் முதல் சிம்பு வரை பலரும் படத்தைப் பார்த்துப் பாராட்டியதோடு, மாரி செல்வராஜையும் புகழ்ந்துள்ளனர்.


இயக்குநர் பாலா படத்தைப் பார்த்து நெகிழ்ந்து போய் பேசக் கூட தோன்றாமல் அமர்ந்த காட்சியை பலரும் பார்த்து வியந்தனர். பாலாதான் வழக்கமாக மனசை இறுக்கமாக்குவார்.. அவரே இறுகிப் போய் விட்டார் என்றால் வாழை எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்ற வியப்பு அது.


இந்த நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் மாரி செல்வராஜ் வீட்டுக்கே போய் அவரை நேரில் பாராட்டி மகிழ்ந்தார். அவரது குடும்பத்துடன் சேர்ந்து சாப்பிட்டும் மகிழ்ச்சி அடைந்தார். இந்த நிலையில் வாழை படம் குறித்து கவிதை நடையில் ஒரு பாராட்டை அவர் வெளியிட்டுள்ளார்.




அந்தக் கவிதை வடிவ பாராட்டு:


நாடே கொண்டாடும் 

"வாழை"!

கண்ணீரில் 

கருக்கொண்ட காவியம்.


கலையுலகே 

புருவம் உயர்த்தும் 

கலைநயம். 


உழைக்கும் மக்களுக்கு

வாழைக்குலைகள் மட்டுமல்ல

வாழ்க்கையே பெருஞ்சுமை.


புளியங்குளத்தில் முளைவிட்ட

பொதுவுடைமை அரசியலின் தாக்கத்தால் 

மாரியின் வேர்களில் மார்க்சியம்.


போதாது கூலியென போர்க்குரல் வெடித்தெழும்

பொருளியல் முரண் விளக்கும்

புரட்சிகரப் படைப்பு!


வறுமையை எதிர்த்து வலிகளைச் சுமந்து வாழ்க்கையைத் தேடும்

வரலாற்றுக் குறிப்பு!


விபத்தில்தான் பலி 

என்றாலும்,

இது வெண்மணி வெங்கொடுமையின் 

வேறொரு வடிவம். 


பச்சிளம் குழந்தை

பருவத்திலும் 

குடல் முறுக்கும் 

பசியடக்கி

கொடுந்துயர

தடைநொறுக்கி

வெகுண்டெழுந்து

போராடி

வெற்றி இலக்கை

எட்டித் தொட்ட 

ஒரு பிறவிப்போராளியின் தன்வரலாறு.


இது மாரியின் 

மழலைப்பருவ 

வரலாறு எனினும்

ஒரு சமூகத்தின் உயிர்வலி! 


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்