மேடையில் இருந்தாலும்.. விஜய் மனசு என்னை நோக்கித்தான் இருந்திருக்கிறது போல.. திருமாவளவன் கிண்டல்!
சென்னை: அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் நான் கலந்து கொள்ளாதது குறித்து கூறிய விஜய், என் மனசு அங்கேதான் இருந்திருக்கும் என்று கூறியுள்ளார். உண்மையில், விஜய் மனசுதான் அங்கே இல்லாமல் என்னை நோக்கி இருந்திருக்கிறது போலும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் இன்று காலை செய்தியாளர்களிடம் திருமாவளவன் பேசும்போது, எனது மனது விழாவிலேயேதான் இருந்திருக்கும் என்று விஜய் பேசியுள்ளார். அவருடைய மனது மேடையில் இல்லை. என்னை நோக்கியே இருந்திருக்கிறது என புரிந்து கொள்ள முடிகிறது. நான் எங்கே இருந்தேன் என்று எண்ணிக் கொண்டே இருந்திருக்கிறார் போல.
இந்த விழாவில் நான் கலந்து கொள்ளவில்லை என்று அவருக்கு வருத்தம், ஆதங்கம். அதனால் அப்படிச் சொல்லியுள்ளார். ஆனால் எனக்கு எந்த நெருடலும் இல்லை. சுதந்திரமாக எடுத்த முடிவு இது. கட்சி நலன், கூட்டணி நலன் கருதி எடுத்த முடிவு. சனாதன சூழ்ச்சிக்கு பலியாகாமல் இருக்க வேண்டும் என்ற உறுதிப்பாட்டுடன் எடுத்த முடிவு.
பங்கேற்க முடியாமல் போனதற்கு அவர் சொல்வதைப் போல எந்த அழுத்தமும் காரணம் இல்லை. நான் சுதந்திரமாக எடுத்த முடிவு. தொடக்கத்திலேயே விகடன் பதிப்பகத்தாரிடம் விளக்கிச் சொல்லி விட்டேன். விஜய்யும் நானும் ஒரே மேடையில் நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்கும் சூழல் இருந்தால் இதை வைத்து அரசியல் செய்யக் கூடிய சிலர் அல்லது அதற்கான செயல் திட்டத்தை வகுத்துக் காத்துக் கொண்டிருப்போர், திரிபுவாதம் செய்வதற்கும், திசை திருப்புவதற்கும் வாய்ப்பிருக்கிறது என்று அவர்களிடம் தெளிவாக சொல்லி விட்டேன்.
ஆகவே அதற்கு இடம் தரக் கூடாது என்ற அடிப்படையில் தொலைநோக்குப் பார்வையுடன்தான் இந்த முடிவை எடுத்தேன். விஜய் குறிப்பிடுவதைப் போல, திமுக வோ அல்லது கூட்டணிக் கட்சிகளோ எந்த அழுத்தமும் தரவில்லை. அவ்வாறு அழுத்தத்திற்கு பணிந்து இணங்கி முடிவெடுக்க இயலாமல் தேங்கி நிற்கிற நிலையில் விடுதலைச் சிறுத்தைகளும் இல்லை, திருமாவளவனும் இல்லை என்றார் திருமாவளவன்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்